தமிழ்ப் பள்ளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது!

rajinikanth-wikiஒரு முக்கியமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்…..

எல்லாம் நமது தமிழ்ப்பள்ளி விவகாரம்தான்.

மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் புதிய வாழ்வு கிடைக்க ஒரு அறுமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

என் ஆலோசனைக்குப் பலர் முரண்படுவர். ஆனால், இதைப் பயன்படுத்தத் தவறினால் வேறு வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை.

நம்ம படையப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவுக்கு வந்திருக்கிறார் அல்லவா? தமிழ்ப் பள்ளி பிரச்சாரத்திற்காக அவரைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அந்த ஆலோசனை. ஏதாவது அவருடைய ஸ்டைலில் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பச் சொல்ல வேண்டும். உதாரணம்…

“நான் சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி….. உங்கப் பிள்ளைங்கள தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புங்க.“

இப்படி வேறு ஏதாவது பொறுத்தமான வசனத்தைப் பேச வைத்து அதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என்று எல்லா நட்பு ஊடகங்களிலும் பரப்ப வேண்டும்.

2015ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். 2016ம் ஆண்டுக்குள் இன்னும் இரண்டு மாதங்களில் நுழைந்து விடுவோம். அப்போது எல்லா தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் ஒரு பரிதாபமான செய்தி வரும்….. இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை சரிவு….. அந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பில் மாணவர்கள் யாரும் பதியவில்லை….. பல தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லாததால் மூடப்படும் அபாயம்….

இதுபோன்ற அவலங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

முன்பு எம்.ஜி.ஆர் இருந்தார். அவர் பேசிய வசனங்கள், பாடிய பாடல்கள் எல்லாவற்றையும் பலர் தெய்வ வாக்காக ஏற்று இன்றும் அந்த உபதேசங்களைப் பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். பரிதாபமான விஷயம் என்னவென்றால் அவர் பிள்ளைகளைத் தமிழ் கற்ற வேண்டும் என்று எதுவும் சொல்லவில்லை. அதன் விளைவாக தமிழகத்தில்கூட இன்று பல குழந்தைகள் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாமல் வளர்கின்றனர். அவர் மட்டும் உயிரோடு வாழ்ந்த காலத்தில் மலேசியாவுக்கு வந்து, ‘தாய்மார்களே, என் இரத்தத்தின் இரத்தமே, உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புங்கள். உங்கள் இன அடையாளத்தை இழந்து போகாதீர்கள். மொழியை மறந்தால் உங்கள் பிள்ளைகள் ஈனப் பிறவிகளாகிப் போவார்கள்’, என்று சொல்லி விட்டுப் போயிருந்தால், இன்று தமிழ்ப் பள்ளிகளில் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பயின்றிருப்பார்கள். அவர் அப்படிச் சொல்லாமல் விட்டு விட்டதால், இன்று தமிழ்ப் பள்ளிகளில் ஒரு இலட்சம் மாணவர்கள்தான் பயில்கிறார்கள்.

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகளில் 50 ஆயிரம் மாணவர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான். தமிழ்ப் பள்ளிகளுக்கு உயிர் கொடுப்பதற்காக ஆசிரியர்கள் தங்கள் காரில் பக்கத்தில் உள்ள மாணவர்களைச் சுமந்து வரும் அவலம் ஏற்படும்.

தன்மானம் உள்ள தமிழ் ஆர்வலர்கள் என் கருத்தை எதிர்க்கலாம். ஏன்? என் உள்ளமே இதை எதிர்க்கிறது. போயும் போயும் சினிமா நடிவர்களை வைத்தா நாம் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும்? ஆனால், சமுதாயம் நன்மை அடைய தவறான வழியைப் பயன்படுத்திதான் ஆக வேண்டிய நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆலோசனை சொல்வது எனக்கு லேசான காரியம். ஆனால், மற்றவர்களைப் போலவே நானும் வாய்ச் சொல் வீரன். நீங்களாவது அவர் மலேசியாவை விட்டுப் புறப்பட்டுச் செல்வதற்கு முன் முயற்சி எடுங்களேன்…… ப்ளீஸ்!

Johnson Victor