உலக நாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா? – கமல் ஹாஸன்

kkamalஹைதராபாத்: ரசிகர்கள் எனக்கு அளித்துள்ள உலகநாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா? என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொள்கிறேன், என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார். கமல் ஹாஸனின் தூங்காவனம் படத்தின் தெலுங்குப் பதிப்பு சீகட்டி ராஜ்ஜியம் என்ற தலைப்பில் இன்று வெளியானது. அதையொட்டி இன்று செய்தியாளர்களை ஹைதராபாதில் சந்தித்த கமல் கூறியதாவது:

நான் சினிமாக்காரன். என்னை நடிகராக, டைரக்டராக, தயாரிப்பாளராக, நடன இயக்குனராக எந்த கோணத்தில் ரசிகர்கள் பார்த்தாலும் எனக்கு சந்தோஷம்தான். நான் டைரக்டர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். இதை பாலசந்தரிடம் சொன்னேன். அதற்கு அவர் சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் டைரக்டர் ஆகலாம். ஆனால் உன்னுள் ஒரு நல்ல நடிகன் தெரிகிறான் என்று என்னை உற்சாகப்படுத்தினார். அவரது விரலை பிடித்துக் கொண்டு இதுவரை வந்து விட்டேன்.

எனது இந்த நீண்ட பயணம் எனக்கு போராடிக்கவில்லை. காலையில் எழுந்தவுடனேயே நான் சினிமா பற்றித்தான் யோசிப்பேன்.

எனக்கு அரசியல் தெரியாது. கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் இல்லை. ஆனால் கடவுளை நம்புபவர்களை நான் கவரவிப்பேன். அவர்களின் நம்பிக்கைக்கு நான் மதிப்பளிப்பேன்.

நான் இதுவரை சினிமாவில் எவ்வளவு ரூபாய் சம்பாதித்து இருக்கிறேன் என்று கணக்கு பார்க்கவில்லை. ரசிகர்களின் கைதட்டலுக்கு விலை நிர்ணயிக்க முடியாது. நான் எந்தமொழி படத்தில் நடித்தாலும் என்னை தமிழன் என்று யாரும் பார்க்கவில்லை. என்னை ஒரு நடிகராகத்தான் பார்க்கிறார்கள். தெலுங்கு, இந்தி என எந்தமொழி படங்களில் நடித்தாலும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நான் ஒரு நடிகராகத்தான் தெரிகிறேன்.

நான் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தெலுங்குகாரன் என்று கவுதமி என்னை நினைத்துள்ளார். ஆனால் நான் தமிழன் என்று தெரிந்ததும் கவுதமி ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார். நான் அவரிடம் இருந்து தெலுங்கு கற்றுக் கொள்ளவில்லை.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் பாரதியார் கவிதை இடம் பெற்றுள்ளது. அந்த படம் தெலுங்கில் ‘ஆகலி ராஜ்யம்’ என்ற பெயரில் வெளியானது. இதில் தெலுங்கு கவிஞர் ஸ்ரீஸ்ரீயின் கவிதை இடம் பெற்றிருந்தது. அந்த கவிதையை பேசி பேசி நான் தெலுங்கு கற்றுக் கொண்டேன். அந்த கவிதையை கவிஞர் ஸ்ரீஸ்ரீ முன்பு பேசி பாராட்டு பெற்றேன். எப்படி இவ்வளவு அழகாக தெலுங்கு பேசுகிறீர்கள் என்றார். உங்கள் கவிதையை பேசி பேசி தெலுங்கு கற்றுக் கொண்டேன் என்றதும் சந்தோஷப்பட்டார்.

ரசிகர்கள் கொடுத்துள்ள உலக நாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா? என்று அடிக்கடி என்னையே நான் கேட்டுக் கொள்வேன். தெருவில் விளையாடும் ஒரு குழந்தையை அதன் தாய் மகாராஜா என்று அழைப்பது வழக்கம். அதற்கு அந்த குழந்தை நான் மகாராஜா என்று எண்ணி கர்வம் கொள்ளக்கூடாது. அதுபோல் தான் உலக நாயகன் பட்டத்தை நினைத்து நான் கர்வம் கொள்வதில்லை.

சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், எஸ்.வி.ரங்கராவ், நாகேஸ்வராவ் போன்ற பெரிய பெரிய நடிகர்கள் நடித்த சினிமாவில் நான் ஒரு சின்ன நடிகர்தான்.