பணம், பெண்ணுக்கு ஆசைப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேரும் இந்தியர்களின் பரிதாப கதையை கேளுங்க

isisxxxxxxடெல்லி: கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்துவிட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் இந்தியர்களின் நிலைமை எவ்வளவு பாவம் என்பது தெரிய வந்துள்ளது. சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து வரும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், சீனர்களின் பரிதாப நிலை பற்றி தெரிய வந்துள்ளது. சிரியாவில் ஜிஹாத் செய்யப் போகிறோம் என்று செல்கிறவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த உளவு நிறுவனங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பற்றிய தகவல்களை இந்திய உளவு நிறுவனங்களிடம் அளித்துள்ளது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் நபர்கள் போதிய திறமை இல்லாதவர்கள் என்று கருதப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பயன்படுத்திக் கொள்கிறது. மேலும் போர்க்களத்தில் அவர்கள் முன் வரிசையில் நிற்க வைக்கப்படுவதால் அதிக அளவில் பலியாகி வருகின்றனர்.

அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களை விட தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ளது. அவர்களுக்கு அரபு தீவிரவாதிகளைப் போன்று திருமணம் செய்து கொள்ள பெண்களும் அளிக்கப்படுவது இல்லை.

ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பெண்கள் குறைவான அளவில் உள்ளனர். அதனால் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உயர் அதிகாரிகள் மற்றும் அரபு தீவிரவாதிகளுக்கு மட்டுமே திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் போலீஸ் அமைப்பில் அரபிகள் மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள். அந்த போலீசார் இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வெளிநாட்டு போராளிகளின் பாஸ்போர்ட்டுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் அவர்கள் நினைத்தாலும் நாடு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டி உள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தால் அழகிய பெண், வீடு, கை நிறைய, பை நிறைய பணம் என்று வெளியிடப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து பலர் ஏமாந்துவிடுகிறார்கள்.

போர்க்களத்தில் இருந்து தப்பியோடினால் உங்களை ஜின்கள் சும்மா விடாது என்று இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் மிரட்டி வைக்கிறார்கள். இஸ்லாமிய புராணங்களின்படி ஜின்கள் என்பது மனிதனின் கண்ணுக்கு தெரியாத சக்திபடைத்த உயிரினமாகும்.

tamil.oneindia.com

TAGS: