“துருக்கி மீது பொருளாதார தடை’’: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அதிரடி அறிவிப்பு

putin_turkeyeconomic_001ரஷ்ய போர் விமானத்தை வீழ்த்தியதற்கு துருக்கி நாடு மன்னிப்பு கோர மறுத்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கும் பத்திரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கையெழுத்துட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை அன்று ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் வீழ்த்தியதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் பிளவு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 4 நாட்களாக இரு நாட்டு ஜனாதிபதிகளும் வார்த்தை யுத்தத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில், ரஷ்ய போர் விமானத்தை வீழ்த்தியது வருத்தத்தை தருகிறது என்றும், ஆனால் மன்னிப்பு கோர மாட்டோம் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்திருந்தார்.

இதனால் மேலும் சீற்றம் அடைந்த ரஷ்ய ஜனாதிபதி, துருக்கி நாட்டு மீது பொருளாதார தடை விதிக்கும் பத்திரத்தில் கையெழுத்துட்டுள்ளதாக நேற்று ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டது.

துருக்கி மீதான பொருளாதார தடையால் என்ன விளைவு ஏற்படும்?

முதலாவதாக, ரஷ்யாவுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை செய்துகொள்வதில் துருக்கி நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது.

மேலும், துருக்கி நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பில்லியன் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் ரஷ்யா நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதால், துருக்கிற்கு பெரும் வருமானம் கிடைக்கிறது.

ஆனால், தற்போது இந்த பொருளாதார தடை உத்தரவு நடைமுறைக்கு வர உள்ளதால், துருக்கியில் இருந்து எந்த பொருட்களும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது.

இரண்டாவதாக, ரஷ்யா நாட்டில் இயங்கி வரும் துருக்கி நாட்டின் வியாபார மற்றும் பெரு நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான துருக்கி பணியாளர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது.

மூன்றாவதாக, இந்தாண்டு டிசம்பர் 31 திகதி வரையிலான துருக்கி ஊழியர்கள் தவிர்த்து, எதிர்வரும் 2016, ஜனவரி 1ம் திகதியில் இருந்து புதிய துருக்கி ஊழியர்களை ரஷ்ய நிறுவனங்களில் பணியமர்த்த முடியாது.

இது துருக்கி நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பீட்டை ஏற்படுத்துவதுடன் உலக நாடுகளின் மத்தியில் துருக்கி நாட்டிற்குள்ள நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படும் என அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

நான்காவதாக, துருக்கி மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே வாடகை விமானங்கள் செல்ல தடை விதிக்கப்படும். இது துருக்கி நாட்டின் வருமானத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், பாரீஸில் நடக்கவுள்ள பருவகால கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க துருக்கி ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால், அதற்கு விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற தகவல்களும் தற்போது வெளியாகி இருநாடுகளுக்கும் உள்ள பகைமையை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com