மலாய் ஆதரவு 30 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது: முகைதின் எச்சரிக்கை

merdekaஅம்னோவுக்கு  மலாய்க்காரர்  ஆதரவு  30விழுக்காடாகக்  குறைந்து  விட்டது  என்றும்  78 விழுக்காட்டினர்  இப்போதைய  பொருளாதா  நிலையில்  அதிருப்தி  அடைந்திருப்பதாகவும்  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  எச்சரித்துள்ளார்.

மெர்டேகா  மையம்  மேற்கொண்ட  ஆய்வை  மேற்கோள்  காட்டிய  முகைதின்  அம்னோவுக்கு  மலாய்க்காரர்  ஆதரவு  எப்போதுமே  50 விழுக்காட்டுக்குமேல்தான்  இருந்து வந்துள்ளது  என்றார்.

“ஆனால், அண்மையில்  அது  30 விழுக்காடாகக்  குறைந்திருக்கிறது. மலாய்க்காரர்  ஆதரவைப்  பெறுவதில்  அம்னோ  எப்போதுமே  முன்னணியில்  இருந்துள்ளது  ஆனால்,  இப்போது  அது  குறைந்து  விட்டது.

“அதேபோல்  17 விழுக்காட்டினர்தான்  தற்போதைய  பொருளாதார  நிலைமையில்  திருப்தி  கொண்டிருக்கிறார்கள். 78 விழுக்காட்டினருக்குத்  திருப்தி  இல்லை.

“சீனர்களின்  ஆதரவும்  குறைந்து  விட்டது. அது  கடந்த  பொதுத்  தேர்தலில்  13 விழுக்காடாக  இருந்தது.  இப்போது  5 விழுக்காடுதான். அடுத்த  ஈராண்டுகளில்  மேலும்  குறையலாம்.

“இதுதான்  அம்னோவையும்  பிஎன்னையும்  எதிர்நோக்கும்  உண்மை  நிலவரம். நடப்புத்  தலைமைத்துவமும்  1எம்டிபியும்தான்  இதற்குக்  காரணம். இந்நிலையைச்  சரிசெய்யாவிட்டால் ஈராண்டுகளில் (அடுத்த  பொதுத்  தேர்தலில்) அம்னோ தோற்கக்  கூடும்”, என்றாரவர்.

முகைதின்  நேற்று  பாகோ  அம்னோ  தொகுதிக்  கூட்டத்தில் பேசினார்.

தமதுரையில்  மெர்டேகா  மைய  ஆய்வு பற்றிக்  குறிப்பிட்ட  அம்னோ  துணைத்  தலைவர் அந்த  ஆய்வு  எப்போது  செய்யப்பட்டது  என்பதைத்  தெரிவிக்கவில்லை.