நஜிப்பின் தலைமையத்துவத்தை நிராகரியுங்கள், மகாதிரின் திறந்த மடல்

 

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் தோற்கடிக்கப்படும் சாத்தியம் இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் நஜிப்பை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறுகிறார்.

நஜிப்பின் தலைமைத்துவம் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிராகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அம்னோ பாதுகாப்பாக இருப்பதோடு தேர்தலில் வெற்றி பெற்று அனைவருக்கும் நியாயமான அரசாங்கமாக நிலைத்திருக்கும் என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கடிதத்தில் கூறுகிறார்.

அரசாங்கம் மற்றும் கட்சியின் இயந்திரங்களைப் பயன்படுத்தி மக்களைச் சந்திப்பதிலிருந்து தம்மை தடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக இயங்குகின்றன. அதுவே தவறுகள் நடக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் ஆகும் என்று அவர் கூறுகிறார்.

அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டம் டிசம்பர் 8 லிருந்து 12 வரையில் நடைபெறவிருக்கிறது.

கட்சி என்ற அடிப்படையில் அம்னோவின் போராட்டத்தின் விளைவாக மலேசியா உருவானது; எந்த ஒரு தனிப்பட்ட ஒருவரால் அல்ல என்றாரவர்.

ஆனால், இப்போது விசுவாசம் என்பது ஒரு தலைவருக்காக இருக்கிறது, அம்னோவுக்கோ, இனத்திற்கோ, சமயத்திற்கோ, அல்ல என்று மகாதிர் வருத்தப்பட்டுக் கொண்டார்.

“நஜிப்பை ஆதரிப்பது குறிப்பிட்ட சிலருக்கு இலாபகரமானதாக இருக்கலாம். ஆனால், பிஎன் தோற்றால் இவை அனைத்தும் இல்லாமல் போய்விடும்.

“சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களைப் போல் 14 ஆவது பொதுத் தேர்தலில் கட்சி தோல்வி அடைவதற்கான பெரும் சாத்தியம் இருக்கிறது.

“அதன் பின்னர் பின் மற்றும் அம்னோ எதிர்க்கட்சியாகி ஆகிவிடும். எதிர்க்கட்சி என்ற முறையில் அம்னோ இனத்திற்கும், நாட்டிற்கும், சமயத்திற்கும் எதுவும் செய்ய முடியாது”, என்று மகாதிரி அவரின் திறந்த மடலில் கூறியுள்ளார்.

மாறாக, நஜிப் அம்னோ தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டாரானால், அம்னோ மீட்சி பெற்று பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மாபெரும் வாய்ப்பு இருக்கிறது என்றாரவர்.

அம்னோ உறுப்பினர்களை சிந்திக்குமாறு கேட்டுக் கொண்ட மகாதிர், தற்போது பெற்ற வெகுமானங்கள் காரணமாக கண்மூடித்தனமான விசுவாசம் அல்லது ஆதரவு அளிப்பது குறித்து உறுப்பினர்களை அவர் எச்சரித்தார்.

“நீங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவும் விரும்பினால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நஜிப்பின் தலைமைத்துவத்தை நிராகரியுங்கள்”, என்று மகாதிர் முகமட் கூறினார்.