ரசாக் பாகிண்டா ரிம137மி. பெற்றது ‘அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுப்பதற்காக அல்ல’

ra bagindaஅரசியல்  ஆய்வாளர்  அப்துல்  ரசாக்  பாகிண்டா  ஸ்கோர்பியன்  நீர்மூழ்கிக் கப்பல்  கொள்முதலில்  30 மில்லியன்  ஈரோக்கள் (ரிம137 மில்லியன்)  பெற்றதை  ஒப்புக்கொண்டார்.  ஆனால்,  அப்பணம்  பிரெஞ்ச்  நிறுவனமான  தேல்ஸின் சார்பில்   அரசாங்க  அதிகாரிகளுக்குக்  கையூட்டு  கொடுக்கப்  பயன்படுத்திக்  கொள்ளப்பட்டது  என்று  கூறப்படுவதை  மறுத்தார்.

“நான் வேலையை  முடித்துக்  கொடுத்தேன். அதற்குப்  பணம்  கொடுத்தார்கள்.

“நான்  எந்த  அதிகாரிக்கும்  பணம்  கொடுக்கவில்லை”, என்று  ரசாக்  பாகிண்டா  கூறியதாக  த பைனான்சியல்  டைம்ஸ் தெரிவித்தது.

2002-இல்,  மலேசியா  2 ஸ்கோர்பியன்  நீர்மூழ்கிக்  கப்பல்கள்  வாங்கியபோது  நஜிப்  அப்துல்  ரசாக்  துணைப்  பிரதமராகவும்  தற்காப்பு  அமைச்சராகவும்  இருந்தார்.

தேல்ஸ்  இண்டர்நேசனல்  ஏசியா  நிறுவனத்தின்  முன்னாள்  தலைவர்  பெர்னார்ட்  பயோக்கோ “நஜிப்  ரசாக்குடன்  தொடர்புள்ள  அரசாங்க  அதிகாரிகளுக்குக்  கையூட்டு கொடுத்ததாக”க்  குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதன்  தொடர்பில் ரசாக்  பாகிண்டா    கருத்துரைத்தார்.

பயோக்கா-வின்  வழக்குரைஞர்,  தம்  கட்சிக்காரர்   பாகிண்டாவுக்குப்  பணம்  கொடுத்ததை  ஒப்புக்கொள்கிறார்  என்றும்  அது  அவருடைய  தரகு வேலைக்காகக் கொடுக்கப்பட்ட  பணம்  என்றும்  குறிப்பிட்டார். ஆனால்,   அதை  அரசாங்க  அதிகாரிகளுக்குக்  கையூட்டுக்  கொடுப்பதற்கான  பணம்  என்று  மாற்றிச்  சொல்லி  அரசுதரப்பு  வழக்குரைஞர்கள்  “செப்பிடு  வித்தை” ஆடுகிறார்கள்  என்று  குற்றம்  சாட்டினார்.

“அமைச்சர்  பணம்  வாங்கியதாக  அவர்கள்  சந்தேகிக்கிறார்கள்.  ஆனால்,  அதை  நிரூபிக்க  அவர்களிடம்  ஆதாரம்  இல்லை”, என்றார்.