இந்தோனேஷியாவில் விஷ மது குடித்த 26 பேர் சாவு

Indonesiaஇந்தோனேஷியாவில் இயங்கி வந்த சிறிய மதுக்கடைகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் மது தயாரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய ஜாவாவின் யோகியகார்த்தா நகருக்கு அருகே உள்ள ஸ்லெமன் பகுதியில் ஒரு தம்பதியினர், வீட்டில் தயாரித்த மதுவை விற்பனை செய்து வந்தனர். அவர்களிடம் இருந்து மாணவர்கள் உள்பட பலரும் மது வாங்கி குடித்தனர்.

இந்த மதுவில் விஷத்தன்மை கலந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் அதை குடித்ததும் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இவ்வாறு 22 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

இதைப்போல அதே பகுதியில் மது விற்பனை செய்த மற்றொருவரிடம் இருந்து மது வாங்கி குடித்த 4 பேரும் பலியானார்கள்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விஷத்தன்மை உடைய மதுவை விற்பனை செய்த தம்பதி உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

-http://world.lankasri.com