ஜெயேந்திரன்: எம்எச்370 விமானி மீட்கப்பட்டார் என்பது பொய்யான செய்தி

mh370காணாமல்போன  எம்எச்370-இன்  விமானி  மீட்கப்பட்டு  தைவான்  மருத்துவமனை  ஒன்றில்  சிகிச்சை  பெற்று  வருகிறாராம்.

இப்படி  ஒரு  செய்தி  வெளிநாட்டு  இணைய  செய்தித்  தளமான   ‘வோர்ல்ட்  நியுஸ்  டெய்லி’-இல்  சுகாதார அமைச்சின்  துணை  தலைமை  இயக்குனர்  டாக்டர்  ஜெயேந்திரன்  சின்னதுரையின்  படத்துடன்  வெளியாகி  இருந்தது.

ஜெயேந்திரனின்  படத்தைப்  போட்டிருந்தவர்கள்  அவரை  ‘டாக்டர்  சைட்  பூன்  சுலோங்’  என்று  குறிப்பிட்டு,  அவர் “நோயாளி  கடுமையான  அழுத்தத்துக்கு  ஆளாகி  இப்போது  அம்னீசியா வந்திருக்கிறது”, என்று  சொன்னதாகவும் கூறி  இருந்தனர்.

இந்தியாவின்  நாக்பூர்  சென்றுள்ள  ஜெயேந்திரனை  மலேசியாகினி  தொடர்பு  கொண்டு  பேசியது.

ஜெயேந்திரன், “ இச்செய்தியைப்  போட்டவர்கள்  எம்எச்370-இல்  இருந்தவர்களின்  குடும்பங்களையும்  உறவினர்களையும்  எண்ணிப்  பாராமல்  குரூரமாக  நடந்து  கொண்டிருக்கிறார்கள்.

“அது   பொறுப்பற்ற  முறையில்  போடப்பட்ட  ஒரு  செய்தி.  இப்படிப்பட்ட  பொய்யான,  உறுதிப்படுத்தப்படாத  செய்திகளைப்  பார்க்கையில்தான்  இணையத்தில்  வரும் பெரும்பாலான  செய்திகள்  நம்பத்தக்கவை  அல்ல  என்ற  எண்ணம்  ஏற்படுகிறது”, என்றார்.