ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தைக் குற்றமாக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்

 

unilateralconversion-deepaஇந்துவான எஸ். தீபாவுக்கும் இஸ்லாத்திற்கு மதம் மாறிய அவரது முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லா @ வீரனுக்கும் இடையிலான குழந்தை பராமரிப்பு சம்பந்தப்பட்ட வழக்கில் பெடரல் நீதிமன்றம் வழங்கிய ஏகமனதான தீர்ப்பில் தவறான மத மாற்றம் பற்றிய பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படாதது அல்லது பேசப்படாதது வருத்தத்திற்குரியது என்று மசீச இளைஞர் மத்தியக்குழு உறுப்பினர் கெவின் கூ செங் கியாட் இன்று கருத்து தெரிவித்தார்.

சிறார்களை முஸ்லிம்-அல்லாத தந்தை அல்லது தாயாருக்குத் தெரிவிக்காமல் பெற்றோர்களில் ஒருவர் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யும் முறைகேடான நடவடிக்கையை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக்குவது சிறப்பாக இருக்கும் என்று அவர் கருத்துரைத்தார்.

சிறார்களை அவர்களின் பெற்றோர்களில் ஒருவருக்குத் தெரிவிக்காமால் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றம் செய்வது மதம் மாறாத பெற்றோரை அவமதிப்பதோடு அச்சிறார்களை வளர்க்கும் அல்லது அவர்களின் சமயத்தை தீர்மானிக்கும் அவரது உரிமையை மீறுவதாகும்.

முறைகேடான மத மாற்றத்தில் மதம் மாறாத பெற்றோருக்குரிய உரிமைகள் என்ன? மதம் மாறாத பெற்றோருக்கு ஏற்படும் அநீதியைத் தடுக்க, சிறார்கள் இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்படும் பிரச்சனை குறித்து சட்டம் இயற்றப்பட வேண்டும். அச்சட்டத்தின் கீழ் பெற்றோர்களில் எவரும் மதம் மாறாத பெற்றோரின் ஒப்புதல் இன்றி அவர்களின் குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்ய முடியாது என்று கெவின் கருத்துரைத்தார்..

மதம் மாறிய பெற்றோர் ஒருவர், தீபா, எம். இந்திரா காந்தி, ஆர். சுபாஷினி மற்றும் எஸ். ஸாமலா ஆகியோரின் வழக்குகளில் அவர்களின் முன்னாள் கணவர்கள் நடந்துகொண்டது போல், ஒருதலைப்பட்சமாக சிறார்களை மத மாற்றம் செய்தால், அவ்வாறான நடவடிக்கைகள் சட்டப்படி தண்டிக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

இதற்கும் மேலாக, அவ்வாறான ஒருதலைப்பட்சமான மத மாற்றம் தொடக்கத்திருந்தே சட்ட விளைவு அற்றது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கெவின் மேலும் கூறினார்.

சிறார்களை முறைகேடாக மத மாற்றம் செய்வதால் குடும்பத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. மாறாக அது குடும்பத்தைப் பிரிக்கிறது. இதை மேற்கூறப்பட்டுள்ள நான்கு வழக்குகளில் காண முடிகிறது.

தீபாவின் மகன் மற்றும் மகள் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அளித்த அவர்களின் பராமரிப்பைப் பிரிக்கும் தீர்ப்பால் அவர்களின் தாயாருக்கு மட்டும் பெரும் வேதனையை ஏற்படுத்தவில்லை. தொடக்கத்தில் அவரின் இரு குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமையை உயர்நீதிமன்றம் அவருக்கு அளித்திருந்தது. அத்தீர்ப்பை மேல்மூறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியிருந்தது. ஆனால், இப்போது வழக்கத்திற்கு முரணாக குழந்தைப் பருவத்தில் சகோதரியும் சகோதரனும் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒன்றாக வளரும் குழந்தைப் பருவத்திற்கு மாறாக முற்றிலும் முன்பின் தெரியாதவர்களாகிவிடும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

இஸ்வானுக்கு எதிராக 7 போலீஸ் புகார்கள்

 

இன்னும் திடுக்கிடச் செய்வது, மகன் மித்ரன், இஸ்வானுடன் தங்கியிருக்க அளிக்கப்பட்டுள்ள உத்தரவாகும். இஸ்வானுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆண்டு வரையில் குடும்ப வன்முறை குறித்து தீபா ஏழு போலீஸ் புகார்கள் செய்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 2013 இல், அவர்கள் தம்பதிகளாக இருந்த காலத்திலேயே, தீபாவுக்கு இடைக்காலப் பாதுகாப்புக்கான உத்தரவு அளிக்கப்பட்டது.

ஆகவே, ஒருதலைப்பட்சமான மத மாற்றத்தை சட்ட விளைவு அற்றது என்றும் அதனை குற்றமாக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கெவின் கூ செங் கியாட் மீண்டும் வலியுறுத்தினார்.

கெவின் மசீசவின் ஷரியா சட்டம் மற்றும் கொள்கை அமலாக்க சிறப்பு பணிக்குழு உறுப்பினரும் ஆவார்.