நஜிப்பின் தலைவிதியை நிர்ணயிக்கும் குடிமக்கள் பிரகடனம்

-ஜீவி காத்தையா. மார்ச் 26, 2016.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று உலகின் பிரசித்த பெற்ற, அதாவது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்ற வகையில், தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.

najibஅவருடைய தலைமையில் இயங்கி வரும் 1எம்டிபி நிதி ஊழல் விவாகரங்கள் உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்நாட்டில் அதுதான் மக்களின் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவாக ஏற்றம் கண்டுள்ளது. திருடுவதற்கும் தனித் திறமை இருக்க வேண்டும். அது இல்லாமல், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல், வெளிநாட்டிலிருந்து ஓர் அருள் கந்தா கந்தசாமியை கொண்டு வந்து விவகாரத்தை தீர்த்துவிட முயன்றனர். அதுவும் பலிக்கவில்லை. இப்போது இந்த 1எம்டிபி குறித்து விசாரணை நடத்துவதில்  ஈடுபட்டிருந்த அரசாங்க அமைப்புகளைச் சார்ந்தவர்கள், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள் பல இடையூறுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு   நேரடியாக பதில் அளிக்காமல் கேள்வி கேட்பவர்களை தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நசுக்குவதை நஜிப் இப்போது ஒரு தொழிலாகக் கொண்டிருக்கிறார்.

பிரதமர் நஜிப் சம்பந்தப்பட்டுள்ள ஊழல் நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலை அன்றாட அடிப்படையில் சீரழிந்து வருகிறது. இச்சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கும், நாட்டின் பொருளாதார சீர்கேட்டை சரிப்படுத்தி நாட்டு மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்குப் புதிய தலைமைத்துவம் தேவைப்படுகிறது. அது அமைவதற்கு தற்போதைய பிரதமர் நஜிப் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு தழுவிய அளவில் எழுப்பப்பட்டு வருகிறது, அதில் ஆளுங்கட்சியான அம்னோவின் உறுப்பினர்களில் பலரும் அடங்குவர்,.

பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நஜிப்பும் அவரது நெருங்கிய சகாக்களும் தயாரக இல்லை. மாறாக, பிரதமரை பதவியிலிருந்து விலகச் சொல்வது, அகற்ற முயல்வது அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக மற்றும் நன்னெறி கோட்பாடுகளுக்கும் முரணானது என்று அவர்கள் வாதிடுகின்றனர். பொதுத் தேர்தல் வழிதான் அதனைச் செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.

அதுதான் பதவியிலிருக்கும் ஒரு பிரதமரை அகற்றுவதற்கான ஒரே வழி என்றால், பிரதமர் அஹமட் அப்துல்லா படாவி எந்த அடிப்படையில் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்?

1எம்டிபி நிதி ஊழல் பற்றிய முழு விபரங்களும் அறிந்தவர்கள் எழுப்பி வந்த கேள்விகளுக்கு நேரடியாக நாடாளுமன்றத்திலோ, அதற்கு வெளியிலோ பதில் அளிப்பதை இதுவரையில் தவிர்த்து வரும் பிரதமர் நஜிப் தாம் ஒரு திருடன் அல்ல என்றும் மக்கள் சொத்தில் ஒரு காசையோ, ஓர் அங்குல நிலத்தையோ தனக்காக எடுத்துக்கொண்டதில்லை    என்றும் அவருடை பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் மார்ச் 19 ஆம் தேதி 5,000 க்கு மேற்பட்ட அவரது  ஆதரவாளர்களிடம் பேசுகையில் கூறினார் (“If I had wanted to rob, I would have robbed the forest here long ago. I didn’t even take an inch, I didn’t take a single tree in Pahang, I didn’t take the bauxite mine, I didn’t take anything.”).

நஜிப் ஓர் அங்குல நிலத்தையோ, ஒரு மரத்தையோ கொள்ளையடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், பகாங் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டவுடன் 7,000 ஏக்கர் வெட்டுமர நிலத்தை சுல்தானுக்கு வழங்க உடனடியாக            அவர் ஒப்புதல் அளித்தார் (Syed Husin Ali, “The Malay Rulers Regression or Reform?”, p.25).  இது மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதுதானே?

இக்கொள்ளைக்கு அனுமதி வழங்கியவர் மகாதீர்தான். நஜிப்புக்கு முன்னர் பகாங் மந்திரி புசாராக இருந்த அப்துல் ரஹிம் பாகார், சுல்தான் Mahathir Mas stupidமுன்னதாக கோரியிருந்த 30,000 ஏக்கர் வெட்டுமர நிலத்தை கொடுக்க மறுத்து விட்டார். ரஹிம்மை பகாங் மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்றி மத்திய அரசாங்கத்தில் ஒரு துணை அமைச்சர் பதவியை அளித்து சுல்தானின் கோரிக்கையை புதிய மந்திரி புசார் நஜிப் நிறைவேற்ற வழிவகுத்தவர் மகாதீர்.

தமது 22 ஆண்டுகால ஆட்சியில் தமக்கு எது சரி என்று தோன்றியதோ அதனைச் செய்து முடித்தவர் மகாதீர். அதற்காக, நாட்டின் அரசாங்கத்தில் தன்னிச்சையாக இயங்க வேண்டிய, இயங்கிய மூன்று முதன்மைக் கூறுகளான  சட்டம் இயற்றும் துறை (Parliament), நீதிபரிபாலனத்துறை (Judiciary) மற்றும் ஆட்சித்துறை (Executive) ஆகியவற்றை தமது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நாட்டை ஆண்டவர் மகாதீர். தமக்குப் பின்னர் பிரதமரான அஹமட் அப்துல்லா படாவியை பதவியிலிருந்து அகற்றி நஜிப் ரசாக்கை பிரதமராக்கியதும் மகாதீர்தான்.

மகாதீரின் நிழலின் கீழ் வளர்ந்து இன்று ஊழல் மன்னனாகி விட்ட நஜிப், தமக்கு வரம் கொடுத்த மகாதீரின் தலையிலேயே கையை வைக்க எத்தனிக்கும் பத்மாசூரனாகி விட்டார்.

இந்த பத்மாசூரன் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதையும், அவற்றை களைவதற்காக இதுவரையில் எடுத்துக்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகள் எதுவும் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதை உணர்ந்து கொண்டுள்ள மகாதீர், ஆட்சி மாற வேண்டும், நஜிப் அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தற்போது வந்துள்ளார். அதற்கான நடவடிக்கையை மகாதீர் முடுக்கி விட்டுள்ளார்.

 

பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றவர்

 

Zaid - Good Muslimஅஹமட் அப்துல்லா படாவியை பிரதமர் பதவியிலிருந்து அகற்றி நஜிப்பை பிரதமராக்கும் முயற்சியில் மகாதீர் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில், நஜிப் அப்பதவிக்கு பொருத்தமற்றவர் என்றும் அவரால் நாட்டிற்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று போர்க் கொடி உயர்த்தினார் அம்னோ உறுப்பினரும், சட்டத்துறை அமைச்சராகவும் இருந்த ஸைட் இப்ராகிம். மங்கோலியப் பெண் அல்தான்துயா கொலை மற்றும் பல சம்பவங்களைச் சுட்டிக் காட்டி பிரதமர் பதவி ஏற்பவர் பழிகூறல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்பதை ஸைட் வலியுறுத்தினார்.

மகாதீரின் கடும் போக்கு மீண்டும் தொடரப்பட வேண்டும் என்ற  அம்னோவின் தீவிரப் போக்கை கண்டித்த அவர், பிரதமராக நியமிக்கப்படுபவர் அம்னோவின் தலைவராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.  தகுதி பெற்ற அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மக்களின் நம்பிக்கைக்குரிய, ஊழலற்ற, பழிச்சொல்லுக்கு அப்பாற்பட்ட, அனைத்துலக சமூகத்தால் மதிக்கக்கூடிய ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று பேரரசருக்கு ஸைட் இப்ராகிம் வேண்டுகோள் விடுத்தார்.

நஜிப் பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர். அவரை பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மாமன்னருக்கு வேண்டுகோள் விடுத்த ஸைட் இப்ராகிம், அவசரகாலச் சட்டத்தின் கீழ் ராஜா பெட்ரா கமாருடின், தெரசா கோ மற்றும் டான் ஹூன் சோங் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து சட்டத்துறை அமைச்சர் பதவியைத் துறந்தார்.

 

குடிமக்கள் பிரகடனம்

 

மார்ச் 19, 2009 இல், ஸைட் இப்ராகிம் பிரதமர் பதவிக்கு நஜிப் பொருத்தமானவர் அல்ல என்ற அறிக்கையை வெளியிட்டார். அதே காலக்கட்டத்தில், நஜிப்பை பிரதமாக்குவதற்கான நடவடிக்கையில் முன்னாள் பிரதமர் மகாதீர் ஈடுபட்டிருந்தார்.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் 4 இல், மகாதீரும் ஸைட் இப்ராகிமும், இதர தலைவர்களுடன் இணைந்து, பிரதமர் நஜிப் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய குடிமக்கள் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

yrsaymtoarrest37 கூறுகளைக் கொண்ட இப்பிரகடனம் நஜிப்பின் நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டி அவர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இப்பிரகடனத்திற்கு மலேசியாவின் அனைத்து இன மக்களும் ஆதரவு நல்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்பிரகடனம் பேரசரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதல்கட்ட நடவடிக்கையாக, நஜிப்பின் மீது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கோரும் வழக்கை மகாதீர் பதிவு செய்துள்ளார்.

 

நிச்சயமாக நஜிப் ஆதரவாளர்கள் இப்பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து களமிறங்குவார்கள். நேற்று (மார்ச் 24) நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து கிளந்தான் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அம்னோவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி கையொப்பமிட்டுள்ளார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், நஜிப் பிரதமராக நியமிக்கப்படும் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து எதிரும்புதிருமாக இருந்து வந்த மகாதீரும் ஸைட் இப்ராகிமும் ஒன்றிணைந்து அவரை பதவியிலிருந்து அகற்றக் கோரும் குடிமக்கள் பிரகடனத்தில் கையொப்பமிட்டிருப்பது சிலருக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை சீர்குலைத்த மகாதீருடன் உறவா? மகாதீரை எப்படி நம்புவது? அவரிடம் தனித் திட்டம் ஏதாவது உண்டா? அவர் மீண்டும் பிரதமராகும் எண்ணம் கொண்டுள்ளாரா? – இப்படி பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதே வேளையில், இந்த அம்னோக்காரர்களை கையாள்வதற்கு மகாதீரை விட்டால் வேறு வழி இல்லை. ஆகவே, மகாதீரை பயன்படுத்தி நஜிப் கூட்டத்தினரின் அட்டூழியங்களை அடக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டோரும் இருக்கின்றனர்.

மேலும், ஒரு பிரதமரை பதவியிலிருந்து அகற்றி ருசி கண்டு விட்டால், பிறகு வரும் பிரதமர்களை, அவர்கள் மகாதீர்களாக இருந்தாலும் கூட, ஒரு கைபார்த்து விடலாம் என்ற மனப்பான்கு கொண்டவர்கள் இப்பிரகடனத்தை வரவேற்கின்றனர்.

குடிமக்கள் பிரகடனம் காலத்தின் கட்டாயத்தை பறைசாற்றுகிறது என்று கூறலாம். நாடும் நாட்டு மக்களும் தலைமையத்துவத்தின் தவறான போக்கினால் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பற்ற ஒன்றிணைவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று கூறலாம். அரசியல் நாகரீகம் ஒரு படி முன்னேறியுள்ளது.

மேலும், அரசியலில் நிரந்தரமான நண்பர்கள் என்றோ நிரந்தரமான எதிரிகள் என்றோ இல்லை. எதிரிகளான மகாதீர், லிம் கிட் சியாங், ஸைட் இப்ராகிம் போன்றோர் இன்று நாட்டின் நலன் கருதி ஒன்றுகூடியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் ஒன்றையொன்று குண்டுகளை வீசித் தாக்கிக் கொண்ட நாடுகள் இன்று நட்பு நாடுகளாக இருக்கின்றன.

கெட்டவர்கள் என்றும் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. கெட்டவர்கள் செய்த நல்லவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற விதிமுறையும் இல்லை.

பெருங்காவியமான இராமாயனத்தை தீட்டியவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரர் என்பதற்காக அக்காவியம் நிராகரிக்கப்படவில்லை. கிறிஸ்த்துவத்தை எதிர்த்த சால் என்றவர் பால் என்ற புனிதரானார். பல போர்களில் படைவீரர்களைக் கொன்று குவித்த சக்கரவர்த்தி அசோகன் புத்த சமயத்தைத் தழுவினார். நமது முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் சீனாவுக்குச் சென்று இலட்சக்கணக்கான சீனர்களைக் கொன்றவர் என்று வர்ணிக்கப்படும் சீனாவின் தலைவர் மாவ் சே துங்கின் கையைத்தொட்டு குலுக்கியுள்ளார்.

இவர்களுடன் ஒப்பிடுகையில் மகாதீர் ஒரு குழந்தை. ஆனால், கொடுமையானவர்தான். அவர் இழைத்த கொடுமைகளுக்கு  அவர் பொறுப்பேற்க வேண்டும். அக்கொடுமைகளை நாம் மறந்து விடக்கூடாது. நமக்கு நாமே இட்டுக்கொள்ளும் இந்த நிபந்தனையுடன் நாட்டையும் நாட்டு மக்களையும் நஜிப்பின் பிடியிலிருந்து அகற்ற குடிமக்கள் பிரகடனத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். அது குடிமக்கள் என்ற முறையில் நமது கடமையாகும்.