கருப்பாய் இருப்பவன் எல்லாம் தமிழனா? சீமான் அதிரடி

seeman_26நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடந்துள்ளது.

அதில் வேட்பாளர் டாக்டர் சிவக்குமாரை அறிமுகபடுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றி உள்ளார்.

அவர் பேசுகையில், நாம் தமிழர் கட்சியை நானாக தொடங்கவில்லை. வரலாறும், காலத்தின் சூழலும் சேர்ந்து தான் என் கையில் கட்சியை கொடுத்தது.

தமிழக மக்களை, இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் கையேந்தி நிற்கும் மானங்கெட்ட நிலைக்கு தள்ளிவிட்டனர்.

இதனால் தமிழக மக்கள் திருவோடு ஏந்தி தெருவோடு நிற்கின்றனர். இந்த நிலைக்கு காரணம் யார்?

மண்ணின் வளங்கள் எல்லாம் தனிபெரும் முதலாளிகளின் சொத்தாக மாறிவிட்டது.

நிலத்தடி நீரை உறிஞ்சி அதை பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு உருவாக்கி விட்டனர்.

தற்போதைய ஆட்சியாளர்கள், அரசியலை லாபம் பார்க்கும் தொழிலாக மாற்றிவிட்டனர்.

மற்றவர்களை போல, நாங்கள் ஒன்றும் தெரியாத ‘கூ முட்டை’களை வேட்பாளராக நிறுத்தவில்லை.

கூட்டணிக்காக சில அடிமைகளை போல, அள்ளக் கைகளை போல யாரையும் எதிர்பார்த்து நிற்கவில்லை. கொள்கை தெளிவுடன் களத்தில் நிற்கிறோம்.

கருப்பாய் இருப்பவன் எல்லாம் தமிழன் என மக்கள் நினைக்கிறார்கள். அப்படியானால் எருமை மாடுகூட கருப்பாகத்தான் இருக்கிறது.

விஜயகாந்த் என்ன தமிழனா? விஜயகாந்திற்கு பதிலாக சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் ஏற்று கொள்ளலாம்.

அப்படி செய்யாமல் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டு இப்போது அவர் எங்கே என தேடுகிறார்கள்.

94 வயதில் ஒரு மனிதன் ஆள நினைக்கிறார், அடிமைப்படுத்தி ஆள துடிக்கிறார்.

அவருக்கு போட்டியாக 70 வயதில் நம்மை அடிமை படுத்தி ஆள ஏங்குகிறார் அம்மையார்.

முகத்தை பார்த்து கும்பிடுபவர்களை ஏற்கலாம். நிழலை பார்த்து கும்பிடுபவர்களை எப்படி ஏற்பது.

சில பேர் காலில் விழுந்து கும்பிடுகின்றனர். இன்னும் சில பேரில் கார் சக்கரத்தில் விழுந்து கும்பிடும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

ஒரு சீட்டு, இரண்டு சீட்டு, முக்கா சீட்டு, 5 அரை சீட்டுக்காக தவம் கிடக்கிறார்கள்.

சோவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் ஆஸ்பத்திரிக்கே போய் பார்க்க முடியும் முதல்வருக்கு நாட்டின் முதல் குடிமகனாக இருந்த கலாமின் மறைவிற்கு நேரில் வர முடியவில்லை.

அவர் நினைத்திருந்தால் விமான நிலையத்திலேயே போய் அஞ்சலி செலுத்தியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சிங்களர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, எங்கள் ஆட்சியில் 50 ஆயிரம் பேரை கொண்ட சிறப்பு காவல் படை அமைப்போம்.

அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து ஒவ்வொரு படகிலும் 5 பேரை பாதுகாப்புக்காக அனுப்புவோம்.

மீனவர்கள், பெண்களுக்கு என தனி தொகுதிகள் ஏற்படுத்துவோம். தமிழ் தேசிய வங்கி துவக்குவோம். அதன் மூலம் அனைவருக்கும் வட்டி இல்லா கடன் கொடுப்போம்.

மேலும், பனம்பால், தென்னம்பால் ஆகியவற்றை தேசிய மது பானமாக (மூலிகை சாறு) அறிவிப்போம். இவற்றையெல்லாம் நிறைவேற்ற எங்களை தேர்ந்தெடுங்கள் என பேசியுள்ளார்.

-http://www.newindianews.com

 

TAGS: