இரண்டாவது முறையாக தேசிய விருது விழாவில் பங்கேற்காத இளையராஜா!

ilayaraja1சென்னை: டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கவில்லை. 63வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியின் உள்ள விக்யான் பவனில் நடந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ராஜவர்தன்சிங் ரத்தோர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

தமிழில் சிறந்த படமாக வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ தேர்வு பெற்றது. இதில் நடித்த சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகராகவும், சிறந்த படத்தொகுப்பாளராக சமீபத்தில் மறைந்த கிஷோரும் தேர்வு பெற்றனர். இசைஞானி இளையராஜா ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு இசை அமைத்ததற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு தேர்வு பெற்றார். ஆனால் பல்வேறு காரணங்களால் இளையராஜா உள்பட தமிழ் படவுலகை சேர்ந்த பலரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை. ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை பெற்றுக்கொண்டார். இளையராஜா ஏற்கெனவே 2010-ம் ஆண்டு பழசிராஜாவுக்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது பெற்றார். ஆனால் அப்போதும் அந்த விருதினைப் பெற டெல்லிக்குப் போகவில்லை. பின்னணி இசை, பாடல்கள் என தனித்தனியாகப் பிரித்து தேசிய விருது தருவதை இளையராஜா விரும்பவில்லை. ‘சிறந்த பின்னணி இசையைத் தந்தவர், சிறந்த பாடலைத் தரமாட்டாரா? எதற்காக இந்த பாகுபாடு?’ என்று அவர் ஏற்கெனவே கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.filmibeat.com