அம்னோவுடன் ஒத்துழைப்பு, பாஸ் ஒப்புக்கொள்கிறது; ஹூடுட் சட்டம் தேர்தல் பிரச்சாரத்தில் மிளிரும்

 

Nikhududஎதிர்வரும் இரு இடைத் தேர்தல்களிலும் பாஸ் கட்சி ஹூடுட் சட்டம் பற்றி பிரச்சாரம் செய்யும். இத்தொகுதிகளில் மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையில் இருக்கின்றனர் என்று பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் நிக் அப்டு நிக் அப்துல் அசிஸ் கூறுகிறார்.

இன்று பின்னேரத்தில் ஹூடுட் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் பாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அம்னோவின் ஒத்துழைப்பு கிடைத்தது என்பதை ஒப்புக்கொண்ட நிக் அப்டு, அம்னோவின் ஆதரவு இல்லாமல் தனிப்பட்ட உறுப்பினரின் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றார்.

பாஸ் கட்சி ஹூடுட் விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். அம்னோவும்கூட இதில் கவனம் செலுத்தும் – அனைவரும் இதனைச் செய்வதற்கோ, செய்யாமல் இருப்பதற்கோ உரிமை உண்டு என்று அவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதை உரிமையாகக் கோரவில்லை என்றும், இருதரப்புக்குமிடையில் ஒத்துழைப்பு இருந்து வருகிறது, ஆனால் அது பரஸ்பர நன்மைகள் குறித்த விவகாரங்களில் மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.

“நாங்கள் இது பற்றி எப்போதும் தெளிவாகவே இருந்து வருகிறோம். ஆனால் நாங்கள் மத்திய அரசோடு ஒத்துழைக்க முடியாது என்று எண்ணும் சிலர் இருக்கிறார்கள்.

“இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது பாஸ் கூறிவந்துள்ள அந்த மாதிரியான ஒத்துழைப்பைக் காட்டுகிறது என்று கூறிய நிக் அப்டு, முதன்முறையாக ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் மசோதாவை அனுமதித்ததற்காக தைரியமிக்க அவைத் தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்”, என்றார்.

 

கசையடி தற்போதைய 5 லிருந்து 40க்கும் 100 க்கும் இடையில் அதிகரிக்க வேண்டும்

 

இந்த மசோதாவை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்தார். இது ஹூடுட் மசோதா என்று குறிப்பிடப்பட்டாலும் இது ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதி பரிபாலனம்) சட்டம் 1965 க்கு திருத்தங்கள் செய்வதாகும்.

சட்டம் 1965 இன் கீழ், ஷரியா நீதிமன்றங்கள் அதிகபட்சமாக ரிம5,000 அபராதம், மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ஆறு சவுக்கடி தண்டனை மட்டுமே வித்திக்க வகைசெய்கிறது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதா ஹூடுட் சட்டத்தின் மேற்கூறப்பட்ட வரம்பை உயர்த்தி அமலாக்கம் செய்ய விழைகிறது. எடுத்துக்காட்டு, கசையடி 40 லிருந்து 100 க்கும் இடையிலிருக்கும்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள ஏதுவாக இந்த மசோதாவை அடுத்த நாடாளுமன்ற கூட்டம் விவாதிக்கட்டும் என்று அப்துல்லா ஹாடி அவாங் பின்னர் கேட்டுக்கொண்டார்.