பிஏசி தலைவர் பதவி விலக வேண்டும்

pacகட்டுரை: டோனி  புவா

ஹசான்  அரிப்பின்  இறுதிசெய்யப்பட்ட  1எம்டிபி  மீதான  பிஏசி  அறிக்கையிலிருந்து  பேங்க்  நெகாரா  கூறியதாக  மேற்கோள்  காட்டப்பட்டிருந்த “குட்ஸ்டார்  லிமிடெட்  நிறுவனத்தின்  உரிமையாளர்  பெட்ரோசவூதி  இண்டர்நேசனலுடன்  தொடர்பு  கொண்டிராத  ஒரு  தனி  நபர்”  என்ற வரிகளை  ஏன்  தன்மூப்பாக  அகற்றினார்  என்பது  பொதுக்  கணக்குக்குழு  உறுப்பினர்களுக்குப்  புரியாத  புதிராக  இருந்தது.

அதே  வேளை  ஏப்ரல்  6-இல்,  பிஏசி  இறுதி  அறிக்கை  நாடாளுமன்றத்திடம்  ஒப்படைக்கப்படுவதற்கு  முதல்  நாள்  பேங்க்  நெகாராவிலிருந்து  வந்த  இன்னொரு  கடிதத்தையும்  ஹசான்  பிஏசி  உறுப்பினர்களிடம்  காண்பிக்கவில்லை  என்பது  எங்களுக்கு  மேலும்  அதிர்ச்சி  அளித்தது. அப்படி  ஒரு  கடிதம்  இருப்பது   மே 17இல்  நாடாளுமன்றத்தில்  அளிக்கப்பட்ட  அமைச்சர்  ஒருவரின்  பதில்  மூலமாக  தெரிய  வந்ததும்  மறுநாள்   எங்கள்  கூட்டத்தில்  பிஏசி  தலைவரிடம்  அது  பற்றி  வினவினோம்.

ஹசான்,  பேங்க்  நெகாரா  கடிதத்தின்  உள்ளடக்கத்தை  எங்களுடன்  பகிர்ந்துகொள்ள  மறுத்தார்.  நாங்கள்  வாயடைத்து  நின்றோம்.  அது  இரகசிமானது  என்று  ஹசான்  கூறியதை  எங்களால்  புரிந்து  கொள்ள  முடியவில்லை.  பிஏசி   உறுப்பினர்களுக்கு   அதிகாரத்துவ ரகசியக்காப்புச்  சட்ட(ஓஎஸ்ஏ)த்துக்கு  உள்பட்ட  1எம்டிபி  மீதான  தலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கையையே  பார்வையிடும்  அதிகாரம்  உண்டு. ஓஎஸ்ஏ  ஆவணங்களை விடவா  மற்ற  ஆவணங்கள்  இரகசியமானவை?

ஹசானின்  ஐயத்துக்குரிய  நடத்தை  பேங்க்  நெகாரா  கடிதத்தில்  1எம்டிபி-க்குப்  பாதகமான  தகவல்  இருக்க  வேண்டும்  என்ற  எண்ணத்தைத்   தோற்றுவித்தது.  அதில் பேங்க்  நெகாரா  ஜோ   லோ  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  லோ  தேக்  ஜோ-தான்  குட்  ஸ்டார்   லிமிடெட்டின்  முழு  உரிமையாளர்  என்ற  தகவலை    வெளியிட்டிருக்கலாம்  என்று  நான்  சந்தேகித்தேன்.. அதை  பிஏசி  தலைவர்  விளக்க  வேண்டும்  என்று  கேட்டுக்  கொண்டேன். ஹசான் அதை  உறுதிப்படுத்தவுமில்லை  மறுக்கவுமில்லை.

இப்போது  அக்கடிதத்தில்  இருந்த  உண்மையை  வெளிநாட்டு  ஊடகமொன்று-  வால்  ஸ்திர்ட்  ஜர்னல்-  சொல்லித்  தெரிந்துகொள்ள  வேண்டியிருப்பதை  எண்ணி  மலேசியர்கள்  வெட்கப்படுகிறார்கள்.   ஏப்ரல்  6-இல்  அனுப்பப்பட்ட  அக்கடிதம்  குட் ஸ்டார்  லிமிடெட்  “லோ  தெக்  ஜோ-வுக்குச்  சொந்தமானது”  என்பதையும்  அந்த  நிறுவனம்  கைமாறியதில்லை  என்பதையும்  தெள்ளத்தெளிவாகக்  குறிப்பிடுகிறது.

இதனால்  பல  விசயங்கள்  வெட்ட வெளிச்சத்துக்கு  வந்திருப்பதுடன்   1எம்டிபி   பெட்ரோசவூதி  இண்டர்நேசனல்  லிமிடெட்டில்  1எம்டிபி  செய்த  யுஎஸ்$1.83 பில்லியனில்  குறைந்தது   யுஎஸ்$1.03  பில்லியனாவது  ஜோ  லோ-வுக்குச்  சொந்தமான  குட்  ஸ்டார்  லிமிடெட்டுக்குச்  சென்றுள்ளது  என  இதுவரை   சரவாக்  ரிப்போர்ட்,  தி  எட்ஜ்  மற்றும்  எதிரணியினர்  சுமத்திவந்த  குற்றச்சாட்டும்  உண்மை  என்பதை  மெய்ப்பிக்கிறது.

ஹசான்  பிஏசி  உறுப்பினர்களிடம்  பொய்  சொன்னார்

மறுக்கப்பட  முடியாத  இந்தச்  சான்றாதாரம்,  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  1எம்டிபி-இன்  உயர்  அதிகாரிகளும்   எந்தவொரு  சட்டப்பூர்வ  ஆதாரத்தையும்  காண்பிக்காமல்   குட்  ஸ்டார்  லிமிடெட்  பெட்ரோசவூதிக்குச்  சொந்தமானது  என்று  பாசாங்கு  செய்ததைப்  பொய்யென்று  நாறு  நாறாகக்  கிழித்தெறிந்துள்ளது.

இதிலிருந்து நஜிப்பும்  பிஎன்னும்  1எம்டிபி  மீதான  விசாரணைகளை  மூடி  மறைப்பதற்காகவே  ஹசானை  நியமித்திருக்கிறார்கள்  என்பது  தெளிவாகிறது.  பிஏசி  தலைவர்  தம்  நாடாளுமன்ற  பதவியை  இழிவுபடுத்தும்  வகையில்  மலேசிய  மக்களின்  வரிப்பணத்தை  பில்லியன்  கணக்கில்  சுருட்டிக்  கொண்ட  கயவர்களின்  கையாளாக  மாறியிருக்கிறார்.

அவர் பொய்யுரைத்தார், பிஏசி  முடிவுகளுக்கு  எதிராக  நடந்து  கொண்டார். மிக  முக்கியமான  ஆதாரத்தை  அமுக்கி  அதிகாரத்தில்  உள்ளவர்களின்  பல  பில்லியன்  ரிங்கிட்  மோசடியை  மூடிமறைக்க  உதவினார். மலேசிய  வரலாற்றிலேயே  மிகப்  பெரிய  ஊழல்மீதான  நாடாளுமன்ற  விசாரணையைத்  தடுத்தார்.

அவரது  பொறுப்பை  நேர்மையாகவும்  நெறிமுறைகள்  தவறாமலும்  நம்பிக்கைக்கு  உரிய  முறையிலும்  செய்வார்  என்று  மலேசியர்கள்   நம்ப  முடியாது  என்பதால்  ஹசான்   பிஏசி  தலைவராக  இருக்கும்  தகுதியை  இழக்கிறார். பிஏசி-க்கு  அவப்பெயரைக்  கொண்டுவந்து    நாடாளுமன்றத்துக்கு  அவமானத்தை  உண்டாக்கிய  ஹசான்  பிஏசி  தலைவர்  பதவியிலிருந்து  விலக  வேண்டும்  என்று   வலியுறுத்துகிறோம்.

டோனி  புவா:  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  நாடாளுமன்ற  உறுப்பினர்,  பிஏசி  உறுப்பினர்