முள்ளிவாய்க்கால் நிகழ்வை வைத்து மக்களையும் தமிழர் தலைமையையும் கொச்சைப்படுத்தாதீர் !

tna_colombo_1இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் கொண்டு இன்று வரை பலவிதமான போராட்டங்களையும், இழப்புக்களையும் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வந்துள்ளார்கள்.

அதில் ஒரு பகுதிதான் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள்.

இந்த நினைவுகூரும் நிகழ்வில் எல்லாரும் பங்குபற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் ஏன் பங்குபற்றவில்லை என்று கூட கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எல்லோரும் இதை கேட்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான ஒரு சிலர் இதை பெரிதுபடுத்திக்காட்ட முற்படுகின்றனர்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாகாண முதலமைச்சர், இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பரவலாக கலந்து நினைவு கூர்ந்துள்ளார்கள்.

இந்நிலையில் இரா. சம்பந்தன் மட்டும் கலந்து கொள்ளாமைக்கு வேறு பல முக்கிய காரணங்கள் இருக்கலாம்.

ஏனெனில் தமிழ் மக்களின் எதிர்கால, நிகழ்கால உரிமைகள் பற்றிய பல முக்கிய விடயங்களில் கலந்து விளக்கமளிக்க வேண்டிய பொறுப்புக்களால் முள்ளிவாய்க்கால் ஆத்மாக்களின் நினைவுகூரும் நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம்.

அதைப் பெரிது படுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சிதைவடைய முயற்சித்து மூக்குடைபடாதீர்கள் என சம்பந்தப்பட்ட ஒரு சிலரை கேட்டுக் கொள்கின்றார்கள் பொது மக்கள்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதை வைத்து தமிழ் தலைமை ஒன்றுபடவில்லை என்று கூறி ஒரு சில சுயநல அழுக்காறு கொண்டோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்த முனைகின்றார்கள்.

எப்படி ஆயுதபலம் கொண்ட புலிகளை பிளவுபடுத்தி அழித்தார்களோ அதேபோல ஜனநாயக மக்கள் பலம் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் அதன் சரியான தலைமையையும் பிளவுபடுத்தி மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை தமிழ் மக்களுக்கு கொண்டுவர முயற்சிப்பவர்களே. “ஒன்றுபடத் தவறிய தமிழர் தலைமைகள்” என்று மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் என்ற நிலையை உருவாக்க பார்க்கின்றனர்.

அரசாங்கத்திற்கும் மஹிந்த அணியினருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதேபோல வடபகுதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு இந்த எண்ணம் உண்டு.

காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு சர்வதேசம் அறிந்த விடுதலை இயக்கம்.

அதன் தலைமையும் மிகவும் நிதானத்துடன் செயல்படும் தன்மையைக் கொண்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் வாய்ப்பு அண்மித்துக் கொண்டிருப்பதால் அதை குழப்பியடித்து மீண்டும் ஒரு புதிய கட்சிக்கு பின்னால் சென்று முதலில் இருந்து கடைசிவரை எல்லாம் விளங்கப்படுத்தி காலத்தை கடத்தி இரா. சம்பந்தன் தலைமையை குற்றம் சுமத்துவதே இவர்களின் சுயநல உள்நோக்கம் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.

சரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அழித்தாகிவிட்டது. அடுத்து தமிழ் மக்களின் உரிமைகளின் நிலைபற்றி தீர்வு என்ன? நெடுகிலும் புதுப் புதுக் கட்சிகளை உருவாக்கிக் கொண்டு போவதால் உரிமைகள் கிடைத்திடுமா?

ஆரம்பத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒற்றுமையாக நின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு போனவர்களின் இன்றைய நிலை என்ன?

ஒரு தலைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கத் தெரியாதவர்கள் புது கட்சிகளை உருவாக்கி எப்படி தமிழ் மக்களை நல்வழியில் நடத்திச் செல்லப் போகின்றார்கள்.

திருகோணமலையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் இரா. சம்பந்தனின் சார்பில் கே. துரைரெட்ண சிங்கம் எம்.பி. கலந்துகொண்டு மௌன அஞ்சலி செலுத்தி சொற்பொழிவாற்றினார். அத்தோடு ஏனைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து சுடர் விளக்கேற்றி மௌனஞ்சலி செலுத்தினர்.

எடுத்ததற்கெல்லாம் சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் என்று குறை கூறுவதனால் எதிரியின் கையை பலப்படுத்தி கிடைக்க இருக்கும் புதிய அரசியலமைப்பினால் வரும் நல்ல முடிவுகளைக் கூட கிடைக்காமல் செய்வதே ஒரு சிலரின் நோக்கம்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை வலியுறுத்தி பேசியுள்ளார்.

ஆகவே, தற்போதைய அரசு நல்ல முறையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை நகர்த்திச் செல்லும் போது அதை நல்ல முறையில் பயன்படுத்தி வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தாக்கிப் பேசுவோர் தங்களின் இழந்த பதவிகளை மீண்டும் பெறுவதற்கே அல்லாமல் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவல்ல.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ் பேசும் மக்களும் விரும்பக் காரணம் என்னவென்றால் சிங்கள மக்கள் வாழக்கூடாது என்பதல்ல அல்லது பௌத்த சமயம் இருக்கக் கூடாதென்பதல்ல.

திட்டமிட்ட முறையில் கடந்த கால அரசாங்கங்கள் தென்னிலங்கையில் உள்ள மக்களைக் குடியேற்றியதன் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் இன விகிதாசாரம் குறைவடைந்து கொண்டு போகின்றது. விரும்பினால் சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கில் வாழலாம். தமிழ் மக்கள் விரும்புவது உரிமைகளே அன்றி புது கட்சிகளை அல்ல.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களால் எதிர்க்கட்சித் தலைமையை ஏற்றுள்ளது. அதேவேளை தற்போதைய அரசுடன் நல்லிணக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேசத்தினதும் இந்திய அரசினதும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த நல்லிணக்கத்தை அரசுடன் முறித்துக் கொண்டால் அரசியல் பிழைப்பு நடத்தும் நம்மவர்களில் சிலர் அரசுடன் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கும் எதிராகவும் செயல்படுவர்.

கடந்த மஹிந்த அரசு காலத்தில் நடந்தது போல நிலைமை மிக மோசமாக மாறினால் தமிழ் மக்களே மீண்டும் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே, முதலில் புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய பின்பு ஏதேனும் குறைகள், பாதகங்கள் இருப்பின் தட்டிக் கேட்கலாம். அதைவிட்டுப் போட்டு இப்பவே குழப்பியடித்தால் கிடைக்கிறதும் கிடைக்காமல் போகும்.

இதனால் சர்வதேசத்தையும் இந்தியாவையும் பகைக்க வேண்டிவரும்.

மைத்திரி, ரணில் அரசில் எம்மத்தியில் தீவிரவாதம் பேசுபவர்கள், மஹிந்த அரசில் பெட்டிப்பாம்பு போல இருந்தது ஏன்? ஏனெனில் மஹிந்த அரசில் வாய் திறக்க முடியாது, எழுத முடியாது. இதற்கு எம்மத்தியிலும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுக்கும் பங்குண்டு.

அரசியலில் இருந்து ஒதுங்கி பின் புதிய கட்சி ஆரம்பித்தவருக்கும் பங்குண்டு.

தமிழன் எந்தக் காலத்திலும் ஒன்றுபட்டதாக வரலாறு கிடையாது. அதனால் தான் தமிழன் இன்று மூன்றாம் நிலையில் உள்ளான்.

ஒவ்வொருவனும் தான் தான் பெரியவன் என்றால் பிறகேன் தலைவன் என்று ஒருவன் இருப்பான்.

ஆயுதப் போராட்டம் என்பது கடைசி வழி. அதில் கூட ஒற்றுமையில்லை. நானா தலைவன் நீயா தலைவன். பல இயக்கங்கள் ஆளுக்கு ஆள் கதையை வளர்த்து வாய்ச்சண்டை ஆத்திரம், கோபம் மேலீட்டினால் இயக்க மோதல்கள். கடைசியில் தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதாக நம்ம பெடியன்கள் என்று உசுப்பேற்றி அவங்களுக்குள்ளேயே ஆயுத பலப்பரீட்சை.

இதனால் ஒரு சிலர் இராணுவத்திடம் சேர்ந்து காட்டிக் கொடுப்புக்கள். கடைசியில் தாங்களும் அழிந்தது மட்டுமன்றி தமிழ் மக்களையும் அவர்களின் உடமைகளையும் அழித்ததுதான் கண்ட மிச்சம்.

ஆகவே, முள்ளிவாய்க்கால் நிகழ்வை வைத்து தமிழ் தலைமையையும் மக்களையும் பிளவுபடுத்தாமல் ஒன்றுபட்டு எமது உரிமைகளைப் பெறுவதே புத்திசாலித்தனம்.

-http://www.tamilwin.com

TAGS: