எமக்கான அரசியல் தீர்வுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உந்து சக்தியாக நிற்பார்: விக்னேஸ்வரன்

viknswaranநியாயமான ஒரு தீர்வை ஈழத்தமிழர்கள் பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உந்துசக்தியாக நிற்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா ஜெயராம் பெற்ற வெற்றியை வடக்கு மாகாண சபை வரவேற்றுப் பாராட்டும் அதேநேரம், அவரின் அரசுடன் கிட்டிய தொடர்பாடல்களை வைத்துக்கொள்வதற்கும் விரும்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 53வது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதா ஜெயராமுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்து உரையாற்றியபோதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜெயலலிதா ஜெயராம் தமிழகத்தில் முதலமைச்சராக 6வது முறையாகப் பதவியேற்றுள்ளார். இது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. அதையொடிஎமது மனமார்ந்த பாராட்டுதல்களை எம் யாவர் சார்பிலும் முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் அவர் இதுவரை காலமும் ஆற்றிய சேவை அங்குள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்பட்டமையே அவரின் இந்த வெற்றி. எமது நாட்டின் தமிழ் மக்களும் அம்மையாரின் இந்த வெற்றியால் மனமகிழ்ச்சியும், நம்பிக்கையும், தைரியமும் அடைந்துள்ளார்கள்.

எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கொள்கை பிறழாமல் துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர் ஜெயலலிதா. “அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு” என்ற வள்ளுவன் கூற்றுக்கமைய இந்நான்கு பண்புகளும் ஜெயலலிதாவின் ஆட்சியில் குறைவுபடாமல் இருந்துவருவதை நாம் அவதானித்திருக்கின்றோம்.

இந்நாட்டின் தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் தற்போது வெற்றியீட்டியிருக்கும் தமிழக முதலமைச்சர் எமது அரசியல், சமூக, பொருளாதாரஅபிலாஷைகளை நாங்கள் வென்றெடுக்க உறுதியான துணையாக இருப்பார் என்பது எமது எதிர்பார்ப்பு.

போரில் கணவன்மாரை இழந்த 89 ஆயிரத்துக்கும் இற்கும் அதிகமான எமது விதவைப் பெண்களினதும், காணாமற்போன பல்லாயிரக்கணக்கானவர்களின் உறவினர்களதும், போரினால் உடல் ஊறினையும் மனஉளைச்சலையும் எதிர்கொண்ட எம் பாதிக்கப்பட்ட மக்களதும், தம் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் புலம்பெயர் மக்களினதும், பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட சிறார்களினதும் மற்றையோர்களினதும் துயர்களைத் துடைத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எமக்குண்டு.

பலகாரணங்களினால் எமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையே இங்கு இதுகாறும் இருந்துவந்துள்ளது. இந்நிலை மாறவேண்டும். ஜெயலலிதா போன்ற மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எமது மக்களின் விமோசனத்திற்காகப் பாடுபடும் எமக்கு உறுதுணையாக இருப்பர் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

சரித்திர ரீதியாகப் பார்த்தால் 1983ஆம் ஆண்டின் கலவரத்தின் பின் இலட்சத்திற்கும் மேலான புலம்பெயர் தமிழர்கள் தமிழ்நாட்டில் சரணடைந்தனர். அன்று தொடக்கம் இன்றுவரையில் மனங்கோணாமல் எம் மக்களை அங்குவைத்துப் பார்த்துப் பராமரித்து வருவது சாதாரண ஒரு விடயமன்று. தம் மக்களைப் பார்க்கவேண்டிய கடப்பாடுடையவர்கள் எம் மக்களையும் 33 வருடகாலமாகப் பார்த்துப் பராமரித்து வருவது எமது மனப்பூர்வமான நன்றியறிதல்களுக்குரியது.

இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் இந்திய அரசே முகவராக நின்று அதை முன்னேற்றியது. இந்திய அரசாலும் தமிழ் மக்களாலும் எதிர்பார்க்கப்பட்டவை 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தராதுவிடப்பட்டதை விடத் தரப்பட்ட உரித்துக்களும் எமது ஒற்றையாட்சியாளர்களால் பின்னர் பறித்தெடுக்கப்பட்டன.

போருக்குப் பின்னர் நிலைமைமேலும் மோசமடைந்துள்ளது. இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் இன்றும் எம்மிடையே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முகாம் இட்டுள்ளார்கள். எம் காணிகளில் பயிரிடுகின்றார்கள். வருமானத்தைத் தாம் எடுக்கின்றார்கள். எம்மக்களின் தொழில்களுள் உள்ளீடு செய்கின்றார்கள். பல இடர்களுக்கு எம்மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

சிதைந்த 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டி முறையொன்றுக்கு இந்நாடு மாறவேண்டிய அவசியம் உண்டு. அதற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பும் பங்கும் மிக முக்கியமானது. புலம்பெயர் எம்மக்கள் இன்னமும் இந்திய மண்ணில் அவர்கள் பராமரிப்பில் இருக்கின்றார்கள். அவர்களின் திரும்பல் முக்கியமானது என்பதைவிட இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்திய அரசுக்கு எமது தற்போதைய நிலைமையும் எமது வருங்காலமும் தார்மீகப் பொறுப்புக்களாக அமைந்துள்ளன என்பதை இந்திய அரசுக்கு எடுத்துக் கூறக்கூடிய ஒரே தலைவர் ஜெயலலிதா மட்டுமே. அவர் அதைச் செய்து சுமுகமான ஒரு தீர்வை நாம் பெற உந்துசக்தியாக இருப்பார் என்பது எமது கணிப்பும் எதிர்பார்ப்பும்.

இதன் பொருட்டு வடக்கு மாகாணசபையானது ஜெயலலிதாவின் வெற்றியை வரவேற்றுப் பாராட்டும் அதேநேரம் அவரின் அரசுடன் கிட்டிய தொடர்பாடல்களை வைத்துக்கொள்வதற்கும் விரும்புகின்றது. கலை, கலாச்சாரம் மேலும் அரசியலால் எம் இரு நாடுகளின் தமிழ்பேசும் மக்களின் நெருக்கமான ஒத்துழைப்பை நாம் யாவரும் வேண்டி நிற்கின்றோம். மேற்படி எமது பாராட்டுதல்களை எமது அவைத் தலைவர் ஜெயலலிதாவுக்கு உத்தியோகபூர்வமாக உரிய முறையில் சேர்ப்பிப்பார் என நம்புகின்றேன்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: