ஒருதலைப்பட்ச மத மாற்றம், டாக்டர் சுப்ராவிற்கு இலவச ஆலோசனை வழங்க குலா தயார்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 28, 2016.

 

kulaஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றுதல் என்பது மலேசிய அரசசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று பிரதமர் துறை அமைச்சர் ஜாமில் கிர் பஹரோம் கூறியிருப்பது அனைத்து மலேசியர்களையும்  மிகவும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

கடந்த 2009 இல்,  அமைச்சரவையில் ,ஒரு தலைப்பட்சமான மத மாற்றத்திற்கு எதிராக முடிவு ஒன்று எடுக்கப்பட்டது.அதாவது 18 வயதுக்கும் குறைந்தவர்களை அவர்களின் பெற்றோர்கள், குழந்தை பிறக்கும் போது எந்த மதத்தை சார்ந்திருந்தனரோ அதே மதத்தில்தான்  அந்த குழந்தையை 18 வயது வரை வளர்க்க வேண்டும். அப்படி இடையில் பெற்றோர்களில் ஒருவர் மதம் மாறினாலும் கூட  அந்தக் குழந்தையை ஒரு தலைப்பட்சமான முறையில்  மதம் மாற்றம் செய்யக்கூடாது. இந்த அமைச்சரவையின் முடிவு சட்டப் பாதுகாப்பு கொண்டாதாக இல்லாது போனாலும்  அம்முடிவே ஆண் பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்குவதாகவும் அரசியலமைப்பு சட்டத்திற்குஏற்புடையாதாகவும் இருந்தது.

இப்போது ஜாமில் கிர் பஹரோம் கூறுவதைப்பார்த்தால் , தந்தை ஒருவர் தன் குழந்தையை தாயிற்கு தெரியாமல் மதம் மாற்றிவிட்டால். நாளை  அந்த தாயும் அக்குழந்தையை தனது விருப்பம் போல் மற்றொரு மதத்திற்கு மாற்றுவற்கு அனுமதி கொடுக்கின்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

 

பெற்றோர் என்றால் தாய் அல்லது தந்தை என அர்த்தப்படும் என்று அவர்  குறுகிய நோக்கோடு புரிந்துகொண்டு இக்கருத்தை கூறியிருக்கின்றார். பெற்றோர் என்றால்  தாயும் தந்தையும் இருவரும் சேர்ந்ததாக பொருள் படும் என்று  1970 திலேயே அரசாங்க தலைமை வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதையே சரியான அர்த்தமாக ஏற்றுக் கொண்டு இந்த ஒரு தலைப்பட்சமான மத மாற்றத்தை தடை செய்யவேண்டும்.

 

மேலும், அந்த அமைச்சர் ஒரு தலைப்பட்சமான மதமாற்றத்தை நிறுத்துவது என்பது மலேசிய அரசியலமைப்புச் சட்ட விதி 12(14) க்கு புறம்பானது என்று  கூறியிருப்பது அவர் மலேசிய அரசியலமைப்புச் சட்ட விதிகளை  முழுமையாக அறிந்தவர் அல்லர் என்பதைக் காட்டுகிறது.

 

இவர் பிரதமர் துறையில் அமைச்சராக இருப்பதால், இவர் கூறிய கருத்து அரசாங்கத்தின் ஒட்டு மொத்த நிலைப்பாடாக இருக்குமேயானால் , அது 2009 இல் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரானது என்பது தெளிவு. அப்படி என்றால், இது ஆய்ந்தோய்ந்து பாராமல் அரசியல் காரணங்களுக்காக அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு எனத் தெரிகிறது. இதற்கு பாரிசானின் முக்கிய கட்சிகளான மசீசவும் மஇகாவும் தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளன. மலேசியாவை இது ஒரு பயங்கரமான, நிலைத்தன்மையற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

 

இந்தக் குழப்பமான தருணத்தில் , பிரதமர்  உடனடியாக இறங்கி வந்து 2009ல் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றம் ஒன்றும் இல்லை என்பதை மக்களுக்கு தெரியும் வகையில் உத்தரவாதம் கொடுக்கவேண்டும்.

 

அதோடு, பிரதமர் துறை அமைச்சர் ஜாமில் கிர் பஹரோமும் மலேசிய மக்களிடம் தான் வெளியிட்ட கருத்து தவறானது என்னும் வகையில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

 

இந்த சூழலில் மஇகாவிற்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்க ஜனநாயக செயல் கட்சி தயராக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் எஸ். சுப்ரமணியம் இதை கருத்தில் கொள்வார் என்றும் என்ணுகிறேன். அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி, எதிர்காலச் சந்ததியினரும் சிறுபான்மை  சமூகத்தினரும்  நிம்மதியாக  வாழவும்  அரசியலமைப்பின் பாதுகாப்பு என்றும் அவர்களுக்கு உள்ளது  என்ற நம்பிக்கையுடன் இருக்க உறுதி செய்வதற்கும்  இந்த ஆலோசனையை ஜனநாயக செயல் கட்சி மஇகாவிற்கு வழங்க தயாராக உள்ளது.