மூதூர் படுகொலை விசாரணை:20 ஆண்டுகளின் பின்னர் மீண்டும்!

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள குமாரபுரம் கிராமத்தில் நடைபெற்ற படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணை பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது ஜுரி சபை முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

20 வருடங்களுக்கு முன்பு யுத்த காலத்தில் குமாரபுரம் கிராமத்தில் நடந்த இந்த படுகொலைச் சம்பவம், குமாரபுரம் படுகொலை என பலராலும் அழைக்கப்படுகிறது.

 

 

1996ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி அன்று இரவில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள் , குழந்தைகள் உள்பட 26 பேர் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மேலும், 39 பேர் காயமடைந்தனர்.

மது போதையில் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஆவர்.

இந்த படுகொலை தொடர்பாக ஆரம்ப காலத்தில், மூதூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் போது தெகியத்த இராணுவ முகாமில் கடமையாற்றிய 8 இராணுவ வீரர்கள் ,சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் பாதுகாப்பு கருதி சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளாக சிவில் சமூகத்தினர் உற்பட 121 பேர் மூதூர் பொலிஸாரினால் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு, சாட்சிகளில் 20 பேர் அழைக்கப்பட்டுள்ள போதிலும் 16 பேர் மட்டுமே சமுகமளித்திருந்தனர்.

ஏனைய, நான்கு பேரும் மரணமடைந்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் விசாரணையின் போது சாட்சியமளித்த பெண்ணொருவர் தனது கணவரை சுட்டுக்கொன்றது இவர்தான் என அடையாளம் காட்டியுள்ளார்.

குற்றம் சுமத்தப்படட 8 இராணுவ வீரர்களில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் ஏனைய ஆறு பேரும் ஆஜராகியுள்ளனர்.

தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த 6 இராணுவ வீரர்களும், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொலைச் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: