யுத்தமே உலக அரங்கில் “தமிழர்” என்ற அடையாளத்தை பொறித்தது!

vikneswaran01தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் இனம் தரங் கெட்டு வாழ்ந்திட நாம் இடமளிக்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமது இளம் சந்ததியினர் பிறந்தோம், வாழ்ந்தோம் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருக்கின்றனர். இது எமது இனத்தின் அழிவுக்கு வித்திடும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது பலரின் வயிற்றெரிச்சலை வாங்கிகொள்ள வேண்டியதாயுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் ஈடுகொடுக்கும் வகையில் எனது உடல் ஒத்துழைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தமானது பாரிய அழிவுகளை தந்துள்ளது. ஆனாலும் அந்த யுத்தமே உலக அரங்கில் “தமிழர்” என்ற அடையாளத்தையும் பொறிக்க உதவியுள்ளது.

தான் பதவிக்கு வந்த சில மாதங்களில் சிரமதான பணிகளுக்காக இளைஞர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தேன்.

எனினும், சிரமதானத்திற்கான மனோநிலையை எமது மக்கள் இழந்துள்ளனர். சிரமதானம் என்பது மக்களை ஒன்றிணைக்க கூடிய ஒரு சிறந்த வழிமுறையாகும்.

இதேவேளை, எமது இளம் சந்ததியினர் நகர்புற கலாச்சாரத்துக்கு அடிமைப்பட்டு வருகின்றனர். போதைப்பொருள் பாவனை மற்றும் கலாச்சார சீரழிவுகளுக்கும் காரணமாகின்றனர்.

எவ்வாறாயினும், தரமான வாழ்வு வாழ்ந்த எமது தமிழ் இனம் தரங் கெட்டு வாழ்ந்திட நாம் இடமளிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எமது பாரம்பரியங்களை பேணி பாதுகாக்க வேண்டும். நவீனத்தை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறையே எமது வாழ்க்கை முறையாக அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: