மனைவி சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, மகளுடன் 10 கி.மீ நடந்த பரிதாப நபர்.. வைரலாகும் போட்டோ

tbபுவனேஸ்வர்: மருத்துவமனை வாகன வசதியை ஏற்படுத்தி தராததால் இறந்துபோன மனைவியை தோளில் தூக்கிப்போட்டு 10 கி.மீ நடந்து சென்ற கணவரின் படம் வைரலாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் கலஹன்டி பகுதியை சேர்ந்தவர் தனா மஜி. இவரது மனைவி அமன்கடி. டி.பி.நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமன்கடி, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி புதன்கிழமை, அமன்கடி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் 60 கி.மீ தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் வாகன வசதியை செய்து தரவில்லை. பரம ஏழையான தனா மஜிக்கு, வேறு வாகனத்தை வாடகைக்கு அமர்த்த வசதியில்லை.

இதையடுத்து, மனைவி சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, ஊருக்கு நடக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவரது மகளும் உடன் நடந்துவந்தார். சுமார் 10 கி.மீ தூரம் நடந்து சென்ற பிறகு, சில இளைஞர்களை இதை பார்த்து பரிதாபப்பட்டு, விசாரித்து விவரம் அறிந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்ததும், அமன்கடி இறுதி சடங்கிற்கு வேண்டிய நிதி உதவியை செய்வதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார். இந்த போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த மே மாதம் இதேபோல ஒடிசாவில் ஒரு சம்பவம் நடந்தது. வாகனத்திற்கு பணமில்லாததால் ஏழைகள் சிலர் உறவுக்காரர் சடலத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு தூக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

-http://tamil.oneindia.com

TAGS: