தயாரிப்பாளர் சங்கத்தையும் தெலுங்கு பேச வச்சிரலாம்னு கனவு காணாதீங்க விஷால்.. சுரேஷ் காமாட்சி

suresh-kamatchiஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து என்ற பழமொழி அப்படியே இந்த விசாலுக்கு பொருந்தும். செலிபிரிட்டி கிரிக்கெட்டில் ஆரம்பித்தது வினை. இந்த அப்பாஸ் ஒழுங்கா இருந்திருந்தா இந்த புரட்சித் தளபதி கேப்டனாயிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

அங்கேதான் இந்த ஆட்டைக் கடிக்கும் வேலை ஆரம்பித்தது. கேப்டனானதும் தெலுங்கில் மட்டுமே மாட்லாடும் ரமணா, விஷ்ணு விசால் போன்ற இன்னும் சிலரையும் சேர்த்துக்கொண்டு வலம் வர ஆரம்பித்தார் விசால். கிரிக்கெட்டில் கேப்டனானதும் நடிகர் சங்கத்துக்கும் கேப்டனாக ஆசைப்பட்டு நாடகங்கள் நடத்தி பதவிக்கும் வந்தாச்சு. மாட்டையும் கடிச்சாச்சு.

இப்போ குறிக்கோள் தயாரிப்பாளர் சங்கம். வாங்க வேணாங்கல. நீங்க தயாரிப்பாளர் சங்கத்தையும் தெலுங்கு பேச வச்சிரலாம்னு கனவுல கூட நினைக்காதீங்க ராசா. அதை சிறப்பான தமிழர்களே வழிநடத்துவார்கள். நீங்க கொஞ்சம் திரும்பிப் பார்த்து இந்த நடிகர் சங்கத்துக்கு என்னவெல்லாம் சொல்லிப்புட்டு பதவிக்கு வந்தீகளோ அதை நிறைவேற்றப் பாருங்க.

சும்மா அங்கே கூழ் ஊத்தினேன். இங்கே பாடப் புத்தகம் கொடுத்தேன்னு நடிகர் சங்கத்துக்கு வெளியில வேலை செய்றது போறாதுன்னு கூடவே அவர் என்ன பண்ணாலும் பேனர் வைக்க, செய்தியனுப்ப ஒரு கும்பல் வேற. எதுக்கு இந்த வீண் விளம்பரம்? நடிகர் சங்கத்துல ஒண்ணும் கிழிக்க முடியாத நீங்க ஏன் தயாரிப்பாளர் சங்க நாற்காலியை நோக்கி இந்த ஓட்டம் ஓடணும்?

செய்தித் தாள்களில் பணி செய்வதல்ல பதவி. மக்களிடம் வசூலித்த காசில் இப்பவே ஊழல் புகார். அதுவும் கோடிகளில். அட்லீஸ்ட் மக்களிடமிருந்து வசூலித்த அந்த இரத்தக் காசில் கட்டிடத்தையாவது கட்டி முடியுங்கள். நடிகர் சங்க தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் பாதியையாவது நிறைவேற்றுங்கள். அரசியல் ஆசையில் அறிக்கைகளை தந்து வெறும் வாய்ச்சொல் வீரனாகத் திரிந்து கொண்டிருக்க வேண்டாம். எத்தனை நடிகர் சங்க உறுப்பினர்கள் எவ்வளவு மனக்குமுறலோடு உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

போய் அவர்களுக்கு உதவுங்கள். அவர்களை ரட்சியுங்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தமிழர்கள் நாங்கள் ரட்சகனைத் தேடிக்கொள்கிறோம். அதுவும் காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடிகர் சங்கம் போராடாது என அறிவிப்பு செய்த விசாலுக்கு இப்போது இலங்கைத் தமிழர்கள் மீது ஏன் அக்கறை பொத்துக்கொண்டு வருகிறது?

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது வாய்மூடி மவுனித்திருந்த விசால், வாய் திறந்தது கேரளாவில் நாய்களைக் கொன்றபோதுதானே? நாய்களுக்கு உயிர் அற்புதமெனக் கருதும் உங்களுக்கு தமிழர்களின் உயிர் என்னவாகப் பட்டது?? நடிகர் சங்கத்தை தெலுங்கு பேசற சங்கமாக மாற்றி வைத்திருக்கும், நட்சத்திர கிரிக்கெட்டில் தெலுங்கு, கன்னட நடிகர்களுக்கு மட்டும் பாசத்தோடு விமான டிக்கெட் தந்துவிட்டு மற்ற நம் நடிகர்களை புறக்கணித்த உமக்கு எம் தமிழர்களின் இரத்தப் புழுதி பற்றி என்ன தெரியும்? அதை விடுங்கள். சேரனைப் பற்றி பேச விசாலுக்கு என்ன தகுதியிருக்கிறது? சேரன் யார் தெரியுமா? இந்த மண்ணின் பதிவாளன். அற்புத படைப்பாளி. தன் படைப்புகளால் தமிழ் பேசும் உலகெங்கும் தன் காட்சி மொழியை வீசியவன். நிகழ்காலத்தில் நிற்கும் களப் போராளி.

அன்று இருந்த அரசியல் சூழலில் ஈழம் என்று வாயெடுக்கத் துணியாத பல இன்றைய பேஸ்புக் போராளிகளுக்கு நடுவே அன்றே ஈழ மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல்களில் சேரனின் குரலும் ஒன்று. அவன் கோபக்கார பேச்சாளன். மனதில் பட்டதைப் பேசுபவன். அவன் தன் தாய் தமிழ் உறவுகளுடன் என்ன வேண்டுமென்றாலும் பகிர்ந்து கொள்வான். மண்டியிட்டு மன்னிப்பும் கேட்டுக்கொள்வான். அவன் ஈழத் தமிழர்களைத் தன் தொப்புள் கொடி உறவாக எண்ணிப் போராடியவன். அவன் பேசுவது தவறு சரி என்பதை தாயா பிள்ளைகளா பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.

நீங்கள் யார் விசால் இதில் கருத்து சொல்ல?? ஈழ இரத்தம் சிந்தப்படும்போது ‘செல்லமே’ன்னு கொஞ்சிக்கிட்டும் ‘மதுரைக்காரன்டா’ன்னு பொய் வசனமும் பேசிக்கொண்டிருந்த உங்களுக்கெங்கே ஈழத்தமிழர் வரலாறும் சேரனின் பங்களிப்பும் தெரியப் போகிறது? பதவிக்கு வந்த அடுத்த நாளே தென்னிந்திய நடிகர் சங்கம் என தமிழில் இருந்ததை சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் என்று மாற்றிய தமிழ் விரோதிதானே நீங்கள்? எம் தமிழ்ப் படைப்பாளி பற்றிப் பேச உமக்கு எந்த அருகதையும் இல்லை.

சேரன் தன் அண்ணன்களிடமும் தம்பிகளிடம் அக்காக்காக்களிடம் தங்கைகளிடமும் அப்பாக்களிடமும் அம்மாக்களிடமும் அடித்துக் கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் கைகோர்த்துக் கொள்ளவும் எல்லா உரிமையும் கொண்டவர். அவர் சொன்னதை சரி தவறு என எண்ணெய் விட்டு எரிய வைக்க முயற்சிக்கும் துண்டாடும் சக்தியான நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் ஆன நீங்கள் யார் விசால்?

ஈழத் தமிழர்கள் இனியேனும் நிம்மதியாக இருக்கட்டும் என்றிருக்கிறீர்களே? அது என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டது? சுதந்திரமற்று மொழி சிதைய சொந்த பந்தங்களை இழந்து நிற்கும் அவர்கள் சிங்கள ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருக்கிறார்கள் என்ற அர்த்தத்திலா? இல்லை, தன் மக்களின் இன விடுதலைக்காகப் போராடினானே எம் அண்ணன் பிரபாகரன்…

அவன் வழிநடத்துதலில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள் எம் மக்கள் என சொல்ல வருகிறீர்களா? இன்னும் விடியலற்ற சுதந்திரக் கனவுகளில் எப்போதாவது சொந்த நிலத்தில் நின்று வான் பார்க்க மாட்டோமா என்ற மனப்பிசைதலில் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்மக்களின் உள்மனம் தெரியாத உங்களுக்கு ஏன் இந்த வீண் தலையீடு? இத்தகைய பதிவே உங்களுக்கு அரசியல் முதிர்ச்சியோ அனுபவமோ கிடையாது.

சிறுபிள்ளைத்தனமான போக்கில் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற அணுகுமுறையில் பக்குவமற்று பயணிப்பவர் என்பதை காட்டிக்கொடுத்துவிட்டது. முடிந்தால் சேரனிடம் வருத்தம் தெரிவியுங்கள். அதுதான் உங்கள் வரலாற்றிலே கிடையாதே.

அதோடு இனியாவது நிம்மதியாக வாழட்டும் என்ற அர்த்தமற்ற உங்கள் இரக்கப் பதிவை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கி குப்பையில் போடுங்கள். எதுவாக இருந்தாலும் நடிகர் சங்கத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். எங்கள் தமிழ் உறவுகளுக்குள் சிண்டு முடியும் வேலையைச் செய்யாதீர்கள். நன்றி!

tamil.oneindia.com