பிரதமர்துறையின் செடிக் மற்றும் சீட் அமைப்புகளை ம.இ.கா சீண்டக் கூடாது

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 19, 2016.

kulaஇந்திய மக்களின் சமுதாய-பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் செடிக்  மற்றும்  சீட் போன்ற அமைப்புக்களின் வழி நிதி ஒதுக்கீடு செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து  கருத்துரைத்த ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் துணை அமைச்சருமான தேவமணி  இவ்விரு அமைப்புகளும் சரியான  முறையில் செயல்படவில்லை என்று பேசியிருந்தார். மேலும் இவை ம.இ.காவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எதிர்க்கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும், தாம் அது குறித்து பல புகார்கள் பெற்றுள்ளதாகவும் கூறியிருந்தார். இன்னொரு பேராளர் இது போன்ற நிதி ஒதுக்கீடு ம.இ.கா வழியாகத்தான் மக்களுக்குப்  போய் சேரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது போன்ற உண்மைக்குப் புறம்பான , அரசியல் நோக்கம் கொண்ட கருத்துக்களை ம.இ.கா மாநாட்டில்  வெளிக்கொணரும் போது, ம.இ.கா மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையை மேலும் வலுவடையச் செய்யும் என்பதை அந்த பேராளர்கள் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

இந்த இரு அமைப்புகளும் பிரதமர்துறையின் கீழ் வைக்கப்பட்டதன் முக்கிய காரணமே ம.இ.காவின் இயலாமைதான் என்பதை மக்களும்  உணர்ந்துள்ளனர் , அரசாங்கமும் அறிந்துள்ளது. இந்திய மக்களின் நலனுக்காக  எவ்வளவோ ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில்  ம.இ.கா வழியாகத்தான் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. அது இந்திய மக்களுக்குப் போய் சேராததால் அரசாங்கமே செடிக் மற்றும் சீட் போன்ற அமைப்புகளை  அமைத்து ஒதுக்கீடுகள் மக்களுக்கு நேரடியாகப்  போய் சேர வழி வகுத்தது.

ம.இ.கா ஹோல்டிங்ஸின் சொத்துடைமைத் திட்டம், டெலிகொம்ஸ் பங்குகள், ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் அமைக்க அரசாங்கம் கொடுத்த மானியங்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்ததா என்பதை துணைத் தலைவர் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை தான் வியர்வை சிந்தி கட்டியதாக இப்பொழுது முன்னாள் தலைவர் ஒருவர் கூறிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டுக் கொண்டு இப்போதைய ம.இ.கா தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்.

கடந்த 2014ல், துணை அமைச்சர் ஒருவருக்கு அவர் சார்ந்த கல்வி நிறுவனத்திற்கு பாலர் பள்ளிகள் கட்டுவதற்காக ரிம27 மில்லியன் ஒதுக்கப்படதே அதன் கணக்கு விவரங்கள் என்னவாயிற்று? இதுவரையில் சம்பந்தப்பட்ட துணை அமைச்சர் அது குறித்து ஏன் பேசவில்லை?

இந்திய மேம்பாட்டுக்காக ச. சாமிவேலு தலைமையின் கீழ் ஒரு குழுவும் , பழனிவேல் தலைமையின் கீழ் ஒரு குழுவும் திட்டங்கள் தீட்டினார்கள், ஆனால் அவை ஒன்றுமே செயலாக்கம் காணவில்லை என்று இன்றைய தேசியத் தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில், ஏதோ அரசாங்கம் கொடுக்கும் சொற்ப தொகையைக் கொண்டு சீரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றிக் கொண்டுவரும் செடிக் மற்றும் சீட் போன்ற அமைப்புக்களின் மேல் குறை காண்பது ம.இ.கா இந்திய சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.

செடிக்கும் சீட்டும் அவற்றின் சேவைகளைச் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றன என்பதற்கு அவற்றின் வெளிப்படையான செயல்பாடுகளே சாட்சியங்களாக விளங்குகின்றன. எத்தனையோ அரசு சாரா இயக்கங்கள்  செடிக் வழி உதவி பெற்று மக்கள் நலனுக்காக பல திட்டங்களை  நிறைவேற்றிக் கொண்டு வருகின்றன.

ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொண்டு இந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால், ம.இ.காவினர் கீழ்க் கண்ட கோரிக்கைகளை  தைரியமாக பிரதமர் முன் வைக்க வேண்டும்:

1.    கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீடு 250 பில்லியன் ரிங்கிட். அதில் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்டது 150 மில்லியன் ரிங்கிட். இது மொத்த பட்ஜெட்டில் 0.0006 % ஆகும். மலேசிய மக்கள் தொகையில் நாம் 7% என்று எடுத்துக் கொண்டாலும் ஓர் 5 விழுக்காடாகிலும் (12.5 பில்லியன்  ரிங்கிட்) நமக்கு பட்ஜெட்டில்  ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். இது குறித்து நீங்கள் கருத்தொன்றும் கூறவில்லையே ?  ஏன்?

2.    ம.இ.காவின் தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரமணியம் கடந்த 9 வருடகாலமாக அமைச்சரவையில் இருக்கிறார். அவர் அரசாங்கத் துறையில் இந்தியர்களின் எண்ணிக்கைய 7 விழுக்காடாக உயர்த்துவேன் என்று கூறியிருந்தார். அந்த எண்ணிக்கையை உயர்த்திவிட்டாரா? இது குறித்து நஜீப்பிடம் கேட்டிருக்கலாமே ?

3.    செடிக்கிற்கான நிதி ஒதுக்கீடு ரிம100 மில்லியனிலிருந்து ரிம60 மில்லியனாக குறைக்கபட்டதே,  அது உயர்த்தபட வேண்டுமே தவிர குறைக்கப்படக்கூடாது என்று  பிரதமரிடம் கேட்டிருக்கலாமே ?

இவ்வளவு முக்கிய வேலைகள் இருந்தும் இவற்றின் மீது கவனம் செலுத்தாமல்  மேடையில் பேசி பேராளர்களைக் கவரவேண்டும் என்பதற்காக அர்த்தமற்ற  பேச்சுக்கள் பேசுவதை மஇகா தலைமைத்துவம் தவிர்க்க வேண்டும்.