மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைக் காணோம்!

 

 

IMG-20161128-WA0014செரண்டாவில் சில தினங்களுக்குமுன் நிலச்சரிவு ஏற்பட்டது. அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர், மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பார்த்து விட்டு வரலாம் என்று அங்கு சென்று பார்த்த போது அங்கு அப்பள்ளியைக் காணோம். அட, வடிவேலா!

சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பள்ளி கட்டப்படுவது பற்றி தகராறுகள் மற்றும் உண்ணாவிரதம் போன்றவை நடைபெற்றன.

இச்சம்பவங்களுக்கு முன்னரும், பின்னரும் அப்பள்ளியைக் கட்டுவதற்கான நிதி உதவி அளிக்க பெரும் தலைவர்கள் முன்வந்தனர்.

பிரதமர் நஜிப் 2010 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் ரிங்கிட் அளிப்பதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் 2012 ஆம் ஆண்டில் இரண்டரை மில்லியன் ரிங்கிட் கொடுப்பதாக அறிவித்தார். அதற்குப் பின்னர், அதே ஆண்டில் அன்றைய மஇகா தலைவர் ஜி. பழனிவேலு ரிங்கிட் இரண்டு மில்லியன் அளிப்பதாகக் கூறினார்.

இவற்றை அடுத்து, 2012 ஆண்டு வரவு செலவின் கீழ் 19 தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளை மாற்றிடங்களில் நிறுவ போதிய நிதி உறுதி செய்யப்பட்டது என்று மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான வரைவு பிரதமர் துறை அறிக்கை கூறுகிறது.

உருமாற்றத்தின் வழி தமிழ்ப்பள்ளிகளை வலுப் பெறச் செய்தல் செயலறிக்கை பிப்ரவரி 2014 என்ற அறிக்கையில் “அட்டவணை (2012 பட்ஜெட்டில் மாற்றிடங்களில் நிர்மாணிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்)” என்ற தலைப்பின் கீழ் 19 தமிழ்ப்பள்ளிகளின் பெயர்களும் அவற்றுக்கு அளிக்கப்பட்ட “போதிய நிதி” உதவியின் தொகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ள  “நிர்மாணிக்கப்பட்ட” 19 தமிழ்ப்பள்ளிகளில் 19 ஆவது எண்ணைக் கொண்டிருக்கிறது மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி. அதற்கு ரிம2,000,000.00 நிதியுதவி அளிக்கப்பட்டதும் அந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் துறையின் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான மேம்பாட்டு திட்ட வரைவு அதன் பிப்ரவரி 2014 செயலறிக்கையில் 2012 பட்ஜெட்டில் மாற்றிடங்களில் நிர்மாணிக்கப்பட்ட 19 தமிழ்ப்பள்ளிகளில் மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியும் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நவம்பர் 2016 இல், மிஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைக் நிர்மாணிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் காணப்படுவதெல்லாம் நிர்வாணமாக நிற்கும் குட்டையும் நெட்டையுமான சில சிமெண்ட் தூண்கள்தான்.

“நிர்மாணிக்கப்பட்ட” மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி எங்கே?