பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

jalliசென்னை : ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்கு முன் தீர்ப்பு வழங்கப்படாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்த போதிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் போராட்டம் :

ஜல்லிக்கட்டுக்கு 2014 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகியதால், ஜல்லிக்கட்டு மீதான தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கி, நல்ல தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடனடியாக பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு வழங்கில் தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு:

அனுமதி கேட்டு போராட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றாலும், தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கடலூரிலும், நேற்று மதுரை அருகே கரிசல்குளத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட நிலையில், பொங்கல் தினமான இன்றும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. மதுரை – அவனியாபுரம் அருகே தற்காலிக வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று, மாடுகளை பிடித்தனர். இதே போன்று தேனி மாவட்டம் கூடலூரிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. 10 மாடுகளை கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.

இளைஞர்கள் பேரணி :

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுமதியின்றி பேரணி நடத்தி வருகின்றனர். இவர்கள் கருப்பு கொடியுடன் பேரணியாக சென்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது. பொங்கல் பண்டிகை தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள பொதும்பு கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. 15க்கும் மேற்பட்ட காளைகளும், 50க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

-http://www.dinamalar.com

TAGS: