கடவுள் தான் காப்பாத்தணும்..செத்து மடியும் உயிர்கள்! வரலாறு காணாத வறட்சி

பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு கடுமையான வறட்சியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நூற்றாண்டு காணாத வறட்சியினால் இப்பகுதியில் உள்ள பசுமாடுகள் நீரின்றி இறந்துள்ளன. அந்த பசுமாட்டின் மண்டை ஓடுகள் கடும் வெயிலில் நடுச்சாலையில் கிடக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், விலங்குகள், கால்நடைகள் பசியிலும் தாகத்திலும் இறந்து விடுகின்றன. இதுதான் உண்மை நிலவரம் இந்த 5 ஆண்டுகள் கடும் வறட்சியில் எண்ணிலடங்கா கால்நடைகள் இறந்துள்ளன என்கிறார்.

2012-ஆம் ஆண்டு முதல் ஒரு சொட்டு மழை கூட காணாத வடகிழக்கு மாகாணமாக சியாரா உள்ளது. ஒட்டுமொத்த இடமுமே ஏதோ காட்டுத்தீயில் கருகியது போன்ற காட்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் நோவா கானாவில் 70 குடும்பங்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருவதாகவும் இந்த 5 ஆண்டுகளில் ஒரு சில நாட்களே உணவைப் பார்த்துள்ளனர் என்று வருத்ததுடன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி உலகச் சுகாதார அமைப்பு குடிநீர், சமையல் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு நாளொன்றுக்கு 50 முதல் 100 லிட்டர் தண்ணீர் பரிந்துரை செய்துள்ள நிலையில் பிரேசில் அரசால் இப்பகுதியில் 20 லிட்டர் தண்ணீரையே வழங்க முடிகிறது என்று கூறப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் துணி துவைப்பது, குடிநீர் அருந்துவது போன்றவை ஆடம்பரச்செயல் என்றே பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மோசமான பொருளாதார பின்னடைவினால் அரசு உதவித்தொகைகள் தாமதப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் எங்களைக் காப்பாற்ற ஆண்டவனைத்தான் நம்பிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com