அரசியல்வாதிகளை அல்ல மக்களை நம்பியே பிள்ளைகளுக்காக போராடுகின்றோம்!

நாம் இனியும் அரசில்வாதிகளை நம்பத் தயாராக இல்லை எங்களுடைய மக்களை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க பிரதிநிதி ஆனந்த நடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் ஊர்வலமாக சென்றிருந்தார்கள்.

இதன்போது இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். அத்தோடு விரைவான தீர்வாக அது கிடைக்க வேண்டும்.

இலங்கை அரசிற்கு பொறுப்பு கூறல் விடயத்தில் ஐ.நா கால நீடிப்பு வழங்க கூடாது என்பதனையும் வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

எங்களது இந்தப் போராட்டத்திற்கு நாம் அரசியல்வாதிகளை நம்பியிருக்கவில்லை.

அவர்கள் விரும்பினால் எங்களது போராட்டத்தில் கலந்துகொள்ளலாம். அது அவர்களுடைய விருப்பம் ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவையே பெரிதும் நம்பியிருகின்றோம்.

எனவே இன்று சந்தை வர்த்தகர்கள் வந்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தது போன்று ஏனைய அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஆதரவையே நம்பியிருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த தொடர் போராட்டத்திற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்காது விட்டால் எங்களது போராட்ட வடிவங்கள் மாறும் எனவும் லீலாதேவி குறிப்பிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: