லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியீடு

பிரித்தானிய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் தற்போது முதன் முதலாக வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல் தீவிரவாதி ஒருவன் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளான்.

இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியாகினர். 50 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தாக்குதல் நடத்தியவனை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலை நடத்திய Khalid Masood(52) என்ற பெயருடைய அந்த நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Kent நகரில் உள்ள Huntley School for Boys என்ற பள்ளியில் அவர் பயின்றதாகவும், அந்த நாட்களில் Adrian Ajao என்ற பெயரில் அவர் அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆரம்பக் காலத்தில் கிறித்துவராக இருந்த அவர் பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்.

மேலும், 1980 வருடங்களில், அதாவது அவரது இளைமைக் காலங்களில் பல்வேறு குற்றங்களில் அவர் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவர் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.

ஆனால், இவரைப் பற்றி இவரது பள்ளி தோழர்கள் பேசியபோது ‘பள்ளியில் மிகவும் பிரபலமான நபர் அவர் தான். அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.

பாராளுமன்ற வளாகத்தில் இவர் தாக்குதலை நடத்தியது தங்களால் நம்ப முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீவிரவாதி குறித்து கூடுதல் தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாரு காவல் துறை கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com