‘பாலமுருகன் மரணத்துக்குக் காரணமான போலீசாரைத் தற்காலிக பணிநீக்கம் செய்வீர்

dapமலேசிய   மனித  உரிமை   ஆணையம்(சுஹாகாம்)    எஸ்.பாலமுருகன்   மரணத்துக்குக்   கண்டனம்   தெரிவித்து    அறிக்கை  வெளியிட்டிருப்பதை    அடுத்து   அவரது  மரணத்துக்குக்  காரணமான   போலீஸ்   அதிகாரிகள்  இடைநீக்கம்   செய்யப்பட  வேண்டும்  என்கிறார்   டிஏபி   எம்பி   ஒருவர்.

“சுஹாகாம்   அறிக்கையை   உதாசீனப்படுத்த  முடியாது.  நடவடிக்கை   எடுக்கப்பட   வேண்டும்.  தவறினால்   போலீசையும்  பற்றியும்   அரசாங்கத்தைப்  பற்றியும்   மக்கள்  கொண்டுள்ள  எதிர்மறையான  தோற்றப்பாடு   மேலும்  மோசமடையும் ”,  என்று   சார்ல்ஸ்  சந்தியாகு  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

“முக்கியமாக,  பாலமுருகன்  மரணத்துக்குக்   காரணமாக   இருந்த   போலீசார்   உடனடியாக   இடைநீக்கம்     செய்யப்பட   வேண்டும்”,  என்றார்.

காரணமானவர்களை   அடையாளம்காண    எல்லா  முயற்சிகளையும்   மேற்கொள்ள   வேண்டும்.  அடையாளம்  கண்ட  பின்னர்   சுஹாகாம்   கண்டறிந்ததையும்   பரிந்துரைப்பதையும்   அடிப்படையாக    வைத்து    அவர்கள்மீது    வழக்கு   தொடுக்குமாறு   உள்துறை    அமைச்சர்    சட்டத்துறைத்   தலைவரைப்  பணிக்க   வேண்டும்   என்றவர்   குறிப்பிட்டார்.

பாலமுருகன்   மரணம்   குறித்து    புலனாய்வு  மேற்கொண்ட   சுஹாகாம்   நேற்று  அதன்  முடிவுகளை    அறிவித்தது.

அவர்  சித்திரவதை   செய்யப்பட்டிருக்கிறார்,    அவரைத்   தடுத்து  வைத்ததும்  சட்டவிரோதமாகும்  என   அது   கூறிற்று.

அடி உதை  அவருக்கு  மரணத்தை   உண்டு  பண்ணியிருக்கலாம்   என்ற  முடிவுக்கு   வந்த   அது   அதற்குப்  பொறுப்பானவர்கள்மீது    நடவடிக்கை   எடுக்க   வேண்டும்    என்றும்  பரிந்துரைத்தது.