ராணுவ சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் கொன்று குவிப்பு: சிரியாவில் பயங்கரம்

சிரியாவில் ஆசாத் தலைமையிலான அரசு பிரத்யேக சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகளை கொன்று அடையாளம் தெரியாமல் எரியூட்டுவதாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

சிரியா தலைநகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது Saydnaya ராணுவ சிறைச்சாலை. குறித்த சிறையில் தான் கொத்து கொத்தாக கைதிகளை கொன்று அடையாளம் சிதைக்கப்படும் நோக்கில் எரியூட்டப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறையில் நாளொன்றுக்கு சுமார் 50 கைதிகளையாவது தூக்கிட்டு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அமெரிக்க அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் இதில் பெரும்பாலான கைதிகள் குற்றமேதும் இழைக்காத அப்பாவி பொதுமக்கள் எனவும், பொய் குற்றம் சுமத்தப்பட்டே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

மட்டுமின்றி குறித்த சிறை வளாகத்திலேயே உடல்களை எரியூட்டும் வகையில் பிரத்யேக அறை ஒன்றையும் ஆசாத் அரசு நிறுவியுள்ளதாகவும் இதனாலையே ஆதாரங்கள் அழிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க காரணமாக அமைந்துள்ள புகைப்படங்களில் இவை அனைத்தும் தெளிவாக உள்ளன எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசாத் அரசு மிகவும் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே இந்த விவகாரம் தொடர்பில் வெளியான புகைப்படங்கள் சுட்டிக்காட்டுவதாக கூறிய அமெரிக்க அதிகாரிகள், இவை அனைத்தும் ரஷ்யா மற்றும் ஈரான் அரசுகளின் ஆதரவால் நடைபெறுவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மட்டுமின்றி சிரியாவில் உள்நாட்டு யுத்தம் துவங்கிய இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க தூதர் ஸ்டூவர்ட் ஜான்ஸ் தெரிவித்துள்ளார்.

அம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் Saydnaya ராணுவ சிறைச்சாலையில் 5,000 ல் இருந்து 13,000 அப்பாவி பொதுமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பதாக தெரிய வதுள்ளது.

மட்டுமின்றி பல நூறு கைதிகள் கடும் சித்திரவதைக்கும் உள்ளாகி இருப்பதும் அம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-lankasri.com