பாலாற்றில் மேலும் 3 தடுப்பணைகள் கட்ட திட்டம்

palaruபாலாற்றின் குறுக்கே, மேலும் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்ட, ஆந்திரா அரசு திட்டமிட்டு வருகிறது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, தமிழகத்தில், 222 கி.மீ., பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், வங்க கடலில் கலக்கிறது. இது, கர்நாடகா மாநிலத்தில், 93 கி.மீ., துாரம்; ஆந்திர மாநிலத்தில், 33 கி.மீ., துாரம் பயணிக்கிறது.

பாலாறு பன்மாநில நதி என்பதால், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள், நீர் சேமிக்கும் கட்டமைப்புகளை அமைக்க முடியாது. ஆனால், அதை மீறி, குப்பம், சதானந்தசேரி உள்ளிட்ட, 12 இடங்களில், ஆந்திர அரசு, தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதனால், தமிழக பகுதிகளில் ஓடும் பாலாற்றுக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்துார் மாவட்டத்தில், குப்பத்திற்கு மேல் பகுதியில் இரண்டு, கீழ் பகுதியில் ஒன்று என, மூன்று தடுப்பணைகளை கட்ட, ஆந்திர அரசு திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து, தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மூன்று தடுப்பணைகள் கட்டுவதற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணியில், அம்மாநில பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் நிதியுதவி பெறவும், ஆந்திர அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பணைகள் கட்டப்பட்டால், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மேலும் பாதிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-dinamalar.com

TAGS: