சென்னையில் ரூ.500, ரூ.2000 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

fake-currencyசென்னை: சிட்லப்பாக்கம் பகுதியில் புதிய ரூ.500, ரூ.2000 கள்ள நோட்டுகள் வைத்திருந்த இளைஞர்கள் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிட்லப்பாக்கம் போலீசார் தெரிவிக்கையில், ” பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில் புதன் கிழமை இரவு சந்தேகப்படும் நிலையில் இரண்டு இளைஞர்கள் நின்று இருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரிக்கையில் அவர்களிடம் 500, 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 5500 ஆகும். அதோடு செல்லத் தக்க புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரூ. 6000 இருந்ததும் தெரிய வந்தது.

புதிய ரூபாய் நோட்டுகளுடன் கள்ள ரூபாய் நோட்டுகளையும் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் விட அந்த இளைஞர்கள் முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

அவர்களிடம் மேலும் விசாரிக்கையில், இரண்டுபேரும் பம்மலை அடுத்த நால்கேணி பகுதியைச் சேர்ந்த யூசுப், சுல்தான் என்று தெரிந்தது.” என்றனர். அவர்களிடம் எப்படி கள்ள நோட்டுகள் வந்தன என்பது குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

tamil.oneindia.com

TAGS: