இருமொழித் திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து – மஇகா காப்பாற்றுமா?- கா. ஆறுமுகம்

MIC 1946சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டுள்ள இருமொழித்  திட்டம் பெரும்பாலான குழந்தைகளின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது என்பதால், அது தேவையற்றது. ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு காவலன் என பறைசாற்றும் மஇகா தொடர்ந்து மௌனமாக அரசியல் விளையாடுவது வேடிக்கையாக உள்ளது.

1946-இல் நடந்த மஇகா-வின் முதல் மாநாட்டில், அது இந்தியைத்தான் நமக்கான மொழியாக முன்மொழிந்தது. ஆனால், தமிழர்களின் ஓங்கிய குரலில் அந்த முடிவு மாற்றப்பட்டது. மீண்டும் 2003-இல் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் ஆங்கில மொழியில் போதிக்கும் கொள்கை அமுலாக்கதிற்கும் மஇகா முழுமையான ஆதரவு கொடுத்து உடந்தையாக இருந்தது. அதில் பங்கு கொண்ட அறிவுஜீவிகளும் 1946-இல் இந்தியைப் பரிந்துரைத்த அறிவுஜீவிகளும் தமிழ்மொழி வழி கல்வி மீது நம்பிக்கை அற்ற அரசியல்வாதிகள்.

தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க பள்ளிகளாக உருவாக்கப்பட்டும் கடந்த 60 வருடங்களாக நாம் இன்னமும் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். மானியமும்   கட்டிட சீரமைப்பும் தொடர்ந்து நம்மை கையேந்தும் நிலையில்தான் வைத்துள்ளது. நமது குழந்தைகளில் 45% விழுக்காட்டினருக்கு இன்னமும் பாலர் கல்வி எட்டவில்லை. இது ஒரு கேவலமான நிலையாகும். இதில் குளிர்காய்வது ஓர் அரசியல் விளையாட்டாகிவிட்டது.

Arumugamஅடுத்த பரிமாணத்தில் அமர்ந்திருக்கும் தற்போதைய மஇகா தலைவர்கள் இந்த இருமொழித் திட்டம் சார்பாக இன்னமும் ஏனோதானோ என்று அமைதிகாப்பது வேடிக்கையாகவே உள்ளது. அவர்களின் அமைதி தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தாக அமையும் என்பது அவர்களுக்குத்  தெரியாதா?

அதேவேளையில், ‘தமிழ்ப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் 90 விழுக்காட்டினர் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பி40 (B40) வர்க்கத்தைச் சார்ந்த இவர்களில் பெரும்பாலோர் கல்வியிலும் பின்தங்கியவர்கள். இவர்கள் வீட்டில் தாய்மொழியிலேயே (தமிழ்) அதிகம் பேசுகின்றனர். தங்களுக்குப் பரீட்சயம் இல்லாத மொழியில் அறிவியல், கணிதக் கூறுகளைப் புரிந்துகொள்ள இக்குழந்தைகள் சிரமத்தை எதிர்நோக்குவர் என்பது உறுதி. ஆக, ஆங்கிலம் வழி கணிதம், அறிவியல் படிப்பது இக்குழந்தைகளுக்கு ஏற்புடையதல்ல,’ என்ற ஓர் ஆழ்ந்த விவாதத்தை முன்வைக்கிறார் பி.எஸ்.எம். கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர்  அ. சிவராஜன்.

ஏற்கனவே, 2003-ம் ஆண்டில் அமுலாக்கப்பட்ட கணித, அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் திட்டம் (பி.பி.எஸ்.எம்.ஐ) தோல்வி கண்டதால், 2011-ல் அத்திட்டத்தை மலேசியக் கல்வி அமைச்சு நிரந்தரமாக இரத்து செய்தது. எனவே, மீண்டும் இருமொழித்  திட்டத்தைப் பள்ளிகளில் நீரோட்டம்விட்டு, அதன் அடைவுநிலையை அறிய நினைப்பது தேவையற்ற ஒன்றுமட்டுமல்ல, அது கால விரயத்தையும் உண்டாக்கும் என்கிறார் சிவராஜன்.

Sivarajan-Arumugamஇது என்ன ஒரு பெரிய ராக்கெட் அறிவியலா, மஇகா ஆழ்ந்த அமைதியில் பரிசீலனை செய்யவும் ஆய்வு நடத்தவும்?  இருமொழித்   திட்டத்தில்   கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படவில்லை, பள்ளிகளில் போதுமான பயிற்றுத் துணைப் பொருள்களோ, கருவிகளோ, மேற்கோள் நூல்களோ இல்லை. எனவே, இது மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்வதோடு கணிதம், அறிவியல் பாடங்களில் குழந்தைகளுக்கு வெறுப்பையே உண்டுபண்ணும். ஆங்கில மொழியறிவு இல்லாத குழந்தைகள், இந்தப் பாடங்களை சிறப்புடன் கற்றுத்தேர முடியாது என்பது போன்ற எளிமையான காரணங்கள் கூடவா புரியவில்லை?

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என சிவராஜன் சொல்லும், சிந்திக்க வைக்கும் காரணங்களில் சில:  எதிர்காலத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் உட்பட 6 பாடங்கள் தமிழ் அல்லாத வேற்றுமொழியில் போதிக்கப்படும் நிலை ஏற்படலாம்; இந்த 6 பாடங்களைப் போதிக்க சீன, மலாய் ஆசிரியர்களும் தமிழ்ப்பள்ளிகளில் நியமிக்கப்படலாம்; இது இந்திய ஆசிரியர்களின் வேலை வாய்ப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நிச்சயமாக தமிழ்ப்பள்ளிகள் தம் அடையாளத்தை இழக்கவும் நேரிடலாம். இவற்றைப் பற்றி மஇகா-வுக்கு தெரியாதா? அல்லது, பார்வை இருந்தும் குருடனாக நடிக்கும் திறனா?

dlp moe4மேலும், “சீனப் பள்ளிகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் வேற்றுமொழி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் போதிப்பது தங்களின் அடையாளத்தைப் பாதிக்கும் என்பதால், இதனை மிகவும் கடுமையாகக் கருதுகின்றனர். ஆக, இந்நிலை தமிழ்ப்பள்ளிக்கும் ஏற்பட வாய்புண்டு” என்கிறார் சிவராஜன்.

சீனர்கள் இல்லையென்றால்  நமது நிலைமை அரோகரா என்பதை நாம் அறிவோம். எனவே மஇகா அதன் நிலையை விளக்க வேண்டும், இருமொழித் திட்டத்தை அகற்ற முன்வர வேண்டும்.

ஆங்கில மொழியில் நம் பிள்ளைகள் சிறந்து விளங்க பல வழிகள் உண்டு. அதனை ஆய்ந்தறிந்து கல்வி அமைச்சு பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். ஆங்கிலப் பாடத்திற்குக் கூடுதல் நேர ஒதுக்கீடு, சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்துதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம். அதனைவிடுத்து, இது போன்ற திட்டங்களால் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடக் கூடாது என்ற கருத்தை உள்வாங்கி, கடந்தகால  மஇகா தலைவர்கள் வழியில் சோரம் போகாமல் தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்மொழியையும் காக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்.