பளை துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி! களத்தில் இறக்கப்பட்ட இராணுவம், பொலிஸ் குழுக்களும்

aarmyபளை சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்களும், இராணுவமும் விசாரணைகளை நடத்தி வருகின்றது என்றும், விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று எம்.பிக்களின் மேலதிக கேள்வி நேரத்தில், “அண்மையில் முகமாலை, பளை பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?

இதனுடன் தொடர்புடைய ஏதேனும் தீவிரவாத அமைப்பு, ஆயுதக் குழு அல்லது வேறு ஏதாவது வெளிச் சக்திகள் இணங்காணப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்குப் பதில் அளித்த சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க,

“பொலிஸ் நிலையமொன்றின் மீது எந்தவித தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக பொலிஸ் வாகனமொன்றின் மீதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு படவில்லை. இது சம்பந்தமாக 5 பொலிஸ் குழுக்களும், இராணுவமும் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த விசாரணை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 -tamilwin.com
TAGS: