மலேசியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தேவைப்படும் மலாய் சுனாமியை உருவாக்கக்கூடிய தனிமனிதர் மகாதிர், குலா கூறுகிறார்

 

 

KulaforMமகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அவர் இழைத்தாகப் கூறப்படும் தவறுகளுக்காக அவருடன் ஒத்துழைக்கக் கூடாது என்று சிலர் வலியுறுத்தும் வேளையில், இப்போது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் அவைத் தலைவராக இருக்கும் மகாதிருக்கு எதிராக அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது சரியல்ல என்று விவாதிக்கிறார் டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினரான மு. குலசேகரன்.

முன்பு, துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சிக்கு தாவிய போது அவருடன் இணந்து செயல்படுவதற்கு பலர் 1998 ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்ததை குலா சுட்டிக் காட்டினார்.

நமக்கு வேண்டுமென்றால், மகாதிருடன் ஒத்துழைக்கக்கூடாது என்பதற்கான பல காரணங்களை கூறலாம், நாம் 1998 இல், அன்வாரை ஏற்றுக்கொள்ளகூடாது என்பதற்கு கூறிய பல காரணங்களைப் போல.

ஆனால், அன்வாருடன் ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதுடன் ஒரு சிறப்பான மலேசியாவுக்கான நம்பிக்கையும் கொடுத்துள்ளது என்றாரவர்.

“இப்போது நமது அரசியல் திட்டம் மலேசியாவைப் பாதுகாக்க வேண்டும் என்பது என்றால், நாம் பரம்பரையாக அம்னோவையும் பாரிசானையும் ஆதரித்து வந்துள்ள மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கு தேவைப்படும் மலாய் சுனாமியை உருவாக்க உதவக்கூடிய மிக முக்கியமான தனிமனிதர் மகாதிர்.

“ஆகவே, எதிரணி ஆதரவாளர்கள் சரியான தகவலை பரப்புவதற்கு உதவ வேண்டும் என்பதோடு அனைத்து இனங்களும், சாபா மற்றும் சரவாக் மக்கள் உட்பட, அடுத்த பொதுத்தேர்தலில் ஒன்றிணைவதை உறுதிப்படுத்தி மலேசியாவைப் பாதுகாக்க வேண்டும்”, என்று குலா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தின்கீழ் மலேசியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை. இருந்தும், பின் தலைவர்கள் தொடர்ந்து அவரது புகழைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

மகாதிருக்கு இது தெரியும். அதனால்தான் அவர் அம்னோவிலிருந்து வெளியேறி எதிரணியுடன் சேர்ந்துள்ளார்.

“மலேசியாவை பாதுகாப்பதற்கான ஒரே வழி மக்கள் சக்தி, அதை அடுத்து வரும் பொதுத்தேர்தலில் பெற வேண்டும் என்பதை மகாதிர் நன்குணர்ந்துள்ளார்”, என்றார் குலா.