இந்தியர்களுக்கான பெருந்திட்டமும் ஹிண்ட்ராப்பின் புரிந்துரணர்வு ஒப்பந்தமும்!- கா. ஆறுமுகம்

Arumugamkampongpandan2013 ஆம் ஆண்டில், 13 ஆவது பொதுத்தேர்தலுக்கு சற்று முன்பு நஜிப்பின் நிருவாகம் ஹிண்ட்ராப் இயக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. அதற்குக் கைமாறாக, ஹிண்ட்ராப் பாரிசான் நேசனலின் வெற்றிக்கு தீவிர ஈடுபாட்டுடன் பரப்புரையை மேற்கொண்டது.

ஹிண்ட்ராப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சூறையாடிய பின்னர், 2017 இல், நஜிப் நிருவாகம் இன்னொரு இரண்டாவது செயல்வகைத் திட்டத்தை – மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்ஐபி) – வெளியிட்டுள்ளது. இது 14 ஆவது பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் வெளியடப்படுவது அதன் நோக்கத்தை சீராய வைக்கிறது.

எம்ஐபி இன்னொரு தந்திரம் அல்ல என்றும், அது உண்மையே தவிர வாய்ப்பந்தல் அல்ல என்றும் அளவுக்கு மீறிய எளிமையான விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், அவை நமது சந்தேகங்களைத் தவிர்ப்பதற்கு பதிலாக அவற்றை மேலும் வலுவடையவே செய்கின்றன.

Hindraf Mouநாம் மறக்காமல் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது,  ஏப்ரல்18, 2013 இல் ஹிண்ட்ராப் மற்றும் பாரிசான் நேசனல் அரசாங்கத்திற்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட ஹிண்ட்ராப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். அது கீழ்க்கண்டவற்றை கொண்டிருக்கிறது:

13 வது பொதுத்தேர்தலுக்கு முன் தேசிய முன்னணி ஏற்றுக்கொண்டவை:

  • இடம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய 2013 ஆம் ஆண்டின் வருமான அளவை 2020 க்குள் இரட்டிப்பாக்குவது;
  •  இடம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 20,000 வீடுகள் வீதம் 2013  ஆம் ஆண்டில் தொடங்கி தேவை பூர்த்தி செய்யப்படும் வரையில் வீடுகள் கட்டுதல்;
  • Najib MIBஇடம் பெயர்ந்த இளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி மற்றும் மாற்றுத்திறன் ஆகியவற்றை பெறுவதற்கு முன்தேவையான முன்னேற்பாடு மற்றும் நிதி ஆதரவு அளித்தல்;
  • இந்தியர்களின் நாடற்ற நிலை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் 2018 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக தீர்த்தல்.
  • ஹிண்ட்ராப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மொத்தத்திலிருந்து இந்தியர்களுக்குச்  சேரவேண்டிய பங்கு வீதம் பற்றி வரையறை செய்திருந்தது:
  • 7.5 லிருந்து 10 விழுக்காடு – அனைத்து உயர்நிலைக் கல்வி நிலையங்களின் மாணவர் சேர்த்தல்;
  • 7.5 விழுக்காடு – ஆண்டுதோறும் சிறிய வியாபாரக் கடன் தொகைகள் மற்றும் பல்வேறு அரசாங்கத் திட்டங்களிலிருந்து மிகச் சிறிய கடன் தொகைகள், அனுமதிகள், இசைவளிகள், அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள தனிச்சலுகைகள் மற்றும் அரசாங்கக் குத்தகைகள்;
  • 7.5 விழுக்காடு – பொதுச்சேவை, ஊர்/நகராட்சி மன்றங்கள் மற்றும் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றில் உருவாக்கப்படும் வேலைகள்;
  • ஒப்பந்தத்தில் தரப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை 2013-2018 ஆம் ஆண்டுகளில் அமலாக்கம் செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் செயல்முறை அதிகாரம் கொண்ட ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்று ஹிண்ட்ராப் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வலியுறுத்தியுள்ளது.

தேசிய முன்னணி ஏமாற்றியது 

Hindraf mibவருத்தத்திற்குரியது. அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிப்படி ஹிண்ட்ராப்புடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் வரையறை செய்யப்பட்டிருந்த மேற்கூறிய திட்டங்களில் எதையும் நிறைவேற்ற அது தவறி விட்டது. ஏமாற்றமடைந்த, பிரதமர்துறையில் துணை அமைச்சராக ஜூன் 5, 2013 இல் நியமிக்கப்பட்டிருந்த,   ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி ஒரு முடிவுக்கு வந்தார்: பெப்ரவரி 10, 2014 இல் அவர் பதவி துறந்தார்.

இப்பொழுது 14 வது தேர்தலுக்கு முன்பு  

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் இது மலேசிய இந்தியர் பெருந்திட்டம் என்ற உருவில் மீண்டும் அரங்கேற்றப்படுவதை நாம் காண்கிறோமல்லவா?

ஆயினும், அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாக சில உடன்பாடான செயல்பாடுகளையும் செய்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக, கூடுதல் நிதியை தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கியுள்ளது, வியாபாரக் கடன் தொகைத் திட்டங்கள், திட்டங்களை நிறைவேற்றுவதற்கு செடிக் அமைப்புக்கு மானியம் ஒதுக்கீடு, நாடற்ற நிலையை கையாள்வதற்கு சிறப்பு அமலாக்கப் பணிப்படை (எஸ்ஐடிஎப்) மற்றும் இந்தியர்களின் அவலநிலையைக் கையாள்வதற்கு இந்தியச் சமூகத்திற்கான அமைச்சரவைக் குழு (சிசிஐசி) போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆயினும், இவை எல்லாம்  குறிப்பிட்ட பணிகளுக்காக செய்யப்பட்ட ஒதுக்கீடுகளே தவிர அரசாங்கக் கொள்கை அளவில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு அல்ல. மக்களை மகிழ்ச்சிப்படுத்தி  அமைதியாக்கி அவர்களைத் திருப்திப்படுத்த உண்டாக்கப்பட்டவை.

mibஏழை இந்தியர்களுக்காக செய்யப்படும் தலையீடு வீயூகங்களைப் பொறுத்தவரையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள நடவடிக்கைகள் மிகப் பூர்ணமானது. கொள்கை கட்டமைப்பு மாற்றம், கொள்கை அடிப்படையிலான வள ஒதுக்கீடு மற்றும் அரசாங்கத்தின் அரசியல் திண்மை ஆகியவற்றின் மூலமாக மட்டுமே அவற்றை அடையமுடியும். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் வருடம் சுமார் ரிங்கிட் 400 கோடி அளவிலான வள ஒதுக்கீட்டை ஏழை இந்தியச் சமூகம் அடைந்திருக்க வேண்டும்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள எம்ஐபி ஆவணத்தில் அளிக்கப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் ஏழை இந்தியர்களின் தரத்தில் வெளிப்படையான மாற்றம் ஏதும் இல்லை.

ஏழ்மை தாக்கத்தால் இந்தியர்கள் படும்பாடு  

hindraf2ஏழை இந்தியர்கள் நகர்புற அடிமட்டத்தினராக உருவாக்கப்பட்டுள்ளனர்.  அடிமட்ட இந்தியர் 40% (ஐபி40%) என்ற எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில், 227,600 குடும்பங்கள் இருக்கின்றன. அக்குடும்பங்களின்   சராசரி மாத குடும்ப வருமானம் ரிம2,672 ஆகும். அவற்றில் 82 விழுக்காட்டு குடும்பங்கள் கடனில் மூழ்கியிருக்கின்றன.

சுமார் 3,500 குடும்பங்கள் வறுமைக் கோடு வருமானமான ரிம960 க்கும் குறைவான வருமானம் பெறுகிறார்கள் என்றும்,  இன்னொரு 22,700 குடும்பங்கள் மாதமொன்றுக்கு ரிம1,000 க்கும் குறைவான குடும்ப வருமானம் பெறுபவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக எம்ஐபி குறிப்பிடுகிறது.

2010 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வை மேற்கோள் காட்டி அடிமட்ட இந்தியர் 40% ஐ சேர்ந்தவர்களில் 3 விழுக்காட்டினர் மட்டுமே சொந்த வீடுகளைக் கொண்டிருக்கின்றனர் என்று எம்ஐபி மேலும் கூறுகிறது. இதில் எஞ்சியுள்ள 97 விழுக்காட்டினர் புரம்போக்கு இடங்களில், மலிவு வீடுகளில், ஆக்கிரமிப்பு நிலங்கள் அல்லது வாடகை வீடுகளில் வாழ்கின்றனர். இவர்களில் 89 விழுக்காட்டினர் நகர்புற சூழல்களிலும் எஞ்சியவர்கள் தோட்டப்புறங்களின் எல்லைகளிலும் வாழ்கின்றனர்.

கல்விக்கான வாய்ப்பைப் பொறுத்தவரையில், 45 விழுக்காட்டினருக்கு பாலர்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இல்லை, 54 விழுக்காட்டினர் மட்டுமே யுபிஎஸ்ஆரிலும் 44 விழுக்காட்டினர் எஸ்பிஎம்மிலும் தேர்ச்சி பெருகின்றனர். தொடக்கப்பள்ளி அளவில் படிப்பை நிறுத்திவிடும் குழந்தைகளில், 13 விழுக்காட்டினர் இந்தியர்கள்.

red ICஉழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெரும் சூழல் அற்ற நிலையும், குறைந்த சம்பளத்தில் அவதிப்படுவோரும், வேலையற்றோர் விகிதமும் இந்தியர்களிடையே அதிகமாக உள்ளது.  குற்றச்செயல்களைப் பொறுத்தவரையில், குண்டர்கும்பல் உறுப்பினர்களில் 70 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்றும், வன்முறைக் குற்றங்களில் இந்தியர்களின் பங்கு மிக அதிகமாக 31 விழுக்காட்டில் இருக்கிறது என்றும் எம்ஐபி மேற்கோள் காட்டியுள்ளது.

நாடற்றவர்களின் நிலையைப் பொறுத்தவரையில், 25,000 இந்தியர்கள் சிகப்பு அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் குறித்த பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று எம்ஐபி ஒப்புக்கொள்கிறது. இதுதான் 2013 ஆம் ஆண்டில் நஜிப் நிருவாகம் அளித்த  வாக்குறுதிகளில் மிக எளிமையானது, அதாவது இப்பிரச்சனை 2018 ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதாகும்.

இது ஒரு நிருவாகம் சம்பந்தப்பட்ட வேலை. இதைத் தீர்க்க நினைத்தால் அரசாங்கத்தால் உடனடியாக ஓரிறு நாட்களில் செய்து முடிக்க இயலும். ஆனால், இதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தீர்க்கும் இலக்கை எம்ஐபி கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

2013-இன் வாக்குறுதிகள் பறந்தன, 2017-இல் புதிய வாக்குறுதிகள்        

Estateworkersdemandஇது  எந்த வகையில் பார்த்தாலும் தொடங்கிய இடத்திற்கே திரும்பி வந்து சேரும் ராட்டின சவாரியை சுட்டிக் காட்டுவதாகத் தெரிகிறது.

இந்தியர்களின் நிலைமை வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களைக் கொண்டு பார்த்தால் மிகுந்த கவலையளிப்பவையாக இருக்கிறது. இப்போதைய சூழ்நிலை 2013 ஆம் ஆண்டிலிருந்ததைவிட மிக மோசமாகி விட்டது போல் தெரிகிறது.

ஏழை சமூகங்களின் சமுதாய அடுக்குப்படுகையின் கட்டமைப்பைச் சீர்திருத்தி ஒரு பாரபட்சமற்ற நிலையைக் கொண்டுவரும் அளவுக்கு  அரசாங்கத்தின் கொள்கையை உருவாக்கும் நிலையில் மஇகா-வுக்கு அரசியல் ஆதிக்கம் இல்லை. அவ்வாறான பொறுப்பேற்புப்பணிக்கு மிகப்பெரிய ஒன்றோடொன்று சேர்ந்த அரசியல் செயல் திட்டம் தேவைப்படுகிறது. அவ்வகையில் எந்த கட்டமைப்பும் எம்ஐபியிடம் இல்லை.

எனவே, இந்திய ஏழைகளை எம்ஐபி மேன்மையுறச் செய்யும் என்று நம்புவது வெகுளித்தனமாகும். அதன் வழி அரசாங்கம் போடும் நிதி ஒதுக்கீடுகளை கொண்டு தலைவலிக்கு பெனடோல் சாப்பிடுவது போல், காலத்தை ஓட்டலாம். அடிப்படையில் மாற்றம் தேவை என்றால் அதற்கான கட்டமைப்பு மாற்றங்களை செய்ய முதலில் அரசியல் கொள்கை மாற்றம் நிகழ வேண்டும். அதை தேசிய முன்னணி அரசு கடந்த 60 வருடங்களாக இந்தியர்களுக்கு செய்யத் தவறி விட்டது ஒரு துரோகமாகும்.