தமிழ்ப்பள்ளிகளை அழிக்கும் உரிமை பெற்றோர்களுக்குக் கிடையாது!

dlp moe4இருமொழித் திட்டத்தை அமல்படுத்த பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளிக்கு உரிமை கிடையாது! அது சட்டத்திற்கும் கூட்டரசு அரசமைப்புச் சாசனத்திற்கும் புறம்பானது எனும் அடிப்படையில் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும்,  பள்ளி மேலாளர் வாரியத் தலைவரும் உட்பட மூவர், பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக வழக்கு தொடுக்க முன்வந்துள்ளனர்.  இதற்கு  சட்ட ஆலோசனையையும் தங்களது முழு ஆதரவினையும் வழங்குவதாக மே19 இயக்கம் அதன் பத்திரிக்கைச் செய்தியில் அறிவித்துள்ளது.

 

இதன் விளைவாக, விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இருமொழித் திட்டத்தின்கீழ் பயிலும் சில மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி எந்த ரீதியில் வழங்கப்பட வேண்டும் என்ற உரிமை தங்களுக்கு இல்லையா என்ற விவாதத்தை முன்வைத்துள்ளனர்.  அதாவது, இருமொழித் திட்டத்தைத் தேர்வு செய்வது தங்களது உரிமை என்பது அவர்களின் கருத்தாகும்.

இது சம்பந்தமாக மே19 இயக்கம்  வெளியிட்ட முழு செய்தி வருமாறு:

PJ DLP p2தமிழ்ப்பள்ளிக்குத் தமிழ்மொழி வழிக் கல்வி வழங்குவதுதான் அதன் கட்டமைப்பாகும். தமிழ்ப்பள்ளியின் ஆணி வேர் – தமிழ்மொழி வழிக் கல்வி. ஆங்கிலம் மற்றும் மலாய் போன்ற மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்கள் அனைத்தும் தமிழ்மொழியில்தான் இருக்க வேண்டும். அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட எம்பிஎம்-எம்பிஐ (MBMMBI) என்ற கல்விக் கொள்கையின்கீழ் ஆங்கிலமொழியின் திறனை அதிகரிக்கப் பல வியூகத் திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது.

அதில் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களின் கற்றல் கற்பித்தல் தமிழில்தான் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இருமொழித் திட்டம் என்ற பெயரில் அறிவியல்-கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பது என்பது கொல்லைப்புறமாகத் தமிழ்ப்பள்ளிகளில் நுழைக்கப்பட்ட ஒரு கண்டனத்திற்குரிய திட்டமாகும்.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருப்பது என்பது 200 ஆண்டுகள்   வீறு நடைபோட்ட   தமிழ்க்கல்வியின் வினைப்பயன். தமிழ் வழிக் கல்வி இருப்பதால்தான், இவை தமிழ்ப்பள்ளிகள். இதுதான் தமிழ்ப்பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு. இக்கட்டமைப்பின் நிலைப்பாட்டிற்குத் தோட்டப் பாட்டாளி மக்கள், பாமரர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் சாரா இயக்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரின் அயராத உழைப்பும், உணர்வுமே காரணம். இக்கட்டமைப்பினை மாற்றும் உரிமை பெற்றோர்களுக்கு கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என முடிவு செய்யும் உரிமை உள்ளது. ஆனால், தமிழ்ப்பள்ளியில் தாங்கள் விரும்பும் மொழியில்தான் கற்றுத்தர வேண்டும் எனச் சொல்லும் உரிமை  அவர்களுக்குத் துளியும் கிடையாது. அப்படிப்பட்ட சூழல் தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பை முற்றாகச் சீரழித்துவிடும். அவ்வகையில் தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்புக்கு அழிவைக் கொடுக்கும் உரிமை எந்தப் பெற்றோருக்கும் கிடையாது.  தமிழ்ப்பள்ளி என்பது இச்சமூகத்தின் உரிமை என்பதை இவர்கள் உணர வேண்டும்.

பெரும்பான்மையான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், வீட்டில் ஆங்கிலப் பேசக் கூடிய பெற்றோர்கள் சிலரின் சுயநலமே இந்த இருமொழித் திட்டம். அறிவியல், கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் பயின்றால் ஆங்கிலப் புலமை வளரும் என்பதே இவர்கள் மற்றவர்களிடம் பகிரும் பொய்.

dlp moe2ஆங்கிலமொழியில் எழுத்துகளும், சொற்களும் முழுமையாக அறிமுகப்படுத்தாத நிலையில், ஒரு மாணவனுக்கு அம்மொழியிலே அறிவியல், கணிதம் கற்றுத் தருவது, அம்மாணவனின் அறிவியல், கணிதம், ஆங்கிலம் என மூன்று பாடங்களின் மேலுள்ள ஆர்வத்தையும், புரிதலையும் கெடுக்கும்! இருமொழித் திட்ட அமலாக்கத்தால் தொடக்கப் பள்ளி நிலையிலேயே மொழியைக் காரணம் காட்டி மாணவர்களைப் பிரிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாணவர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுக்கான இடைவெளியை மேலும் அதிகரிக்கிறது.

இன்றும் தமிழ் வழிக் கல்வியின் மீதுள்ள நம்பிக்கையில் 90, 000 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளார்கள். இன்னும் பல இலட்சம் பேர் தமிழ் வழிக் கல்வியில் கற்றுத் தேர்ந்து சிறந்த நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.