பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் பதிவுகள்: 36 வீடுகளில் பொலிசார் அதிரடி சோதனை

facebookஜேர்மனி நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதவிகள் வெளியானதை தொடர்ந்து 36 வீடுகளில் அந்நாட்டு பொலிசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

ஜேர்மன் நாட்டு சட்டப்படி சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டுவது, வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் தகவல்களை பரப்புவது, பாலியல் ரீதியான தாக்குதல்களை நடத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

இதுமட்டுமில்லாமல், இதுபோன்ற தகவல்கள் பேஸ்புக்கில் வெளியானால் அவற்றை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் எனவும், இல்லையெனில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது 50 மில்லியன் யூரோ இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கப்படும் என ஜேர்மன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் விதத்திலும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் அடங்கிய பல பதிவுகள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை சேகரித்த பொலிசார் நேற்று 36 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

இத்தகவலை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், இச்சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்ற தகவலை பொலிசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com