வடகொரியாவில் நிலநடுக்கம்: அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதா?

வடகொரியாவின் கடலோரப் பகுதியில் நேற்று 5.8 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது. இதனால் உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றது.

இந்நிலையில் ஜப்பான் கடலில் இன்று 6.0 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின் அது 5.8 ரிக்டர் அளவு என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலநடுக்கம் கடலுக்கு உள்ளே 334.1 மைல் தூரத்தில் ஏற்பட்டதாகவும், ஆனால் அதன் மையப்பகுதி வடகொரிய நகரான சோங்ஜின் தென்கிழக்கில் 112 மைல் தூரத்தில் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலநடுக்கம் ஏதோ அணுஆயுத சோதனையின் காரணமாக தான் ஏற்பட்டது என்று முதலில் பீதி கிளப்பப்பட்டது. ஏனெனில் வடகொரியா பெரும்பாலும் தனது அணு ஆயுத சோதனைகளை நிலத்திற்கு அடியில் வைத்து தான் செய்கிறது.

இதனால் அணு ஆயுத சோதனையின் காரணமாகத்தான் இருக்குமோ? என்று அஞ்சப்பட்டது.

ஆனால் அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் வடகொரியா சோதனையினால் இந்த நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

-lankasri.com