நஜிப்: இந்திய முஸ்லிம்கள் பூமிபுத்ராக்களே

Ntostudybumistatusநாட்டின் இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி அளிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசிக்கும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.

“இந்திய முஸ்லிம்கள் பூமிபுத்ராக்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை எவ்வாறு அமல்படுத்துவது என்பதுதான் கேள்வி. இதை நிறுவாக அடிப்படையில் செய்வதா அல்லது கேட்டுக்கொண்டவாறு அரசு அறிக்கையில் பதிவு செய்வதா என்பது குறித்து அரசாங்கம் மேற்கொண்டு ஆயும்..

“ஆனால், உண்மை இதுதான், சீமாட்டிகளே மற்றும்  சீமான்களே , நீங்கள் பூமிபுத்ராக்கள்”, என்று சிலாங்கூர், செரடாங்கில் இந்திய முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த திறந்த இல்ல ஹரிராயா உபசரிப்பில் நஜிப் பிரகடனம் செய்தார்.

இந்திய முஸ்லிம்கள் மன்றத்தின் (பெர்மிம்) தலைவர் தஜுடின் ஷாகுல் ஹமீட் இந்திய முஸ்லிம்களை கெஜெட் அறிவிப்பின் மூலம் பூமிபுத்ராக்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று விடுத்திருந்த வேண்டுகோளுக்கு எதிர்வினையாற்றிய நஜிப் இவ்வாறு கூறினார்.
இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துள்ளனர். இங்கு இஸ்லாம் பரவியதற்கு இந்திய நாட்டிலிருந்து இங்கு வந்த முஸ்லிம் வணிகர்கள்தான் பொறுப்பு என்பது வரலாற்று உண்மை.

இந்தச் சமூகம் பிஎன் அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவை அளித்து வந்துள்ளது. அவர்களையும் மற்ற அனைத்து மலேசியர்களையும் கவனித்துக்கொள்ளும் ஓர் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு நஜிப் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.