திசையற்ற போக்கில் மலேசிய திராவிடர் கழகம் – ஞாயிறு நக்கீரன்

MDKஇந்த மலையகத் திருநாட்டின் மூத்த சமூக – சுயமரியாதை இயக்கமான மலேசிய திராவிடர் கழகம்(மதிக), தனது 71-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரத்து நேதாஜி அரங்கில் கொண்டாடி மகிழ்ந்து கலைந்து சென்றது.

மதிக-வின் இந்நாளையத் தலைவர் எஃப்.காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பினாங்கு, பேராக், சிலாங்கூர், மலாக்கா ஆகிய நான்கு மாநிலத் தலைவர்கள் உட்பட அதன் தேசியப் பொறுப்பாளர்களும் நாடளாவிய நிலையில் பேராளர்களும் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கி மாலை 5.00 மணி அளவில் முடிந்தது மதிக-வின் 71ஆவது பொதுக்குழு கூட்டம்.

நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா உதவித் தலைவர்களில்    ஒருவருமான விக்னேசுவரன் சார்பில் பேராக் மாநில சட்டமன்ற மேநாள் அவைத்தலைவர் கணேசன், இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

நாடு விடுதலை அடைவதற்கு ஏறக்குறைய பதினோரு ஆண்டுகளுக்கு முன்னம் தோற்றம் கண்ட இந்த இயக்கத்திற்கென்று சில வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. மஇகா-வின் வயதுதான் மதிக-விற்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுமக்களிடத்தில் உண்டியல் ஏந்திய நிதியைக் கொண்டு, முதல் முதலில் சொந்தக் கட்டடத்தை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அதுவும்இரவு-பகல் எந்நேரமும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ‘மஸ்ஜித் இந்தியா’ வட்டாரத்தில் பெற்ற வலிமையான இயக்கமும் மதிகதான்.

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்ற மேலவையில் உறுப்பியம் பெறும் அளவுக்கு வலிமையான இயக்கமாகத் திகழ்ந்த மதிக ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் தலைநகரமே குலுங்கும். அப்படிப்பட்ட கழகம் தற்பொழுது, ‘பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவொன்று’ என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம், இது கொள்கைவாதிகளின் பாசறையாக இல்லாமல், ஆள் பார்த்து அணிபிரியும் கூடாரமாகத் திகழ்வதுதான். இதற்கு சரியான சான்று, 2014-ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியில்  மதிக பந்திங் வட்டார பிரமுகர் இராமசாமி இல்லத் திருமண விழாவிற்காக தமிழக திராவிடர்க் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் திருமதி அருள்மொழி அழைக்கப்பட்டிருந்தார்.

MDK 1அதற்கான ஏற்பாட்டைச் செய்த மாந்த நேய திராவிடர்க் கழகத் தலைவர் நாக.பஞ்சு, அப்படியே ஒருசில கூட்டங்களிலும் அருள்மொழி பேசுவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். செய்ததோடு நில்லாமல் பத்திரிகை அறிக்கையையும் விட்டார். அவ்வளவுதான், உடனே சென்னை பெரியார் திடலுக்கு தகவல் பரந்தது. மதிக-வின் அப்போதையத் தலைவர் கி.வீரமணியிடம் பற்ற வைக்க, அடுத்த கணமே வீரமணி அருள்மொழியிடம் பேசி, மாந்த நேய திராவிடர்க் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில்கூட பேசக்கூடாதென்று உத்தரவு போட்டார் போலும். அதனால், அருள்மொழியும் அடக்கமாக திருமணத்தை மட்டும் நடத்தி வைத்துவிட்டு தமிழகம் புறப்பட்டார்.

மதிக நிகழ்ச்சியாக இருந்தாலென்ன? மாந்தநேய திராவிடர் கழக கூட்டமாக இருந்தால்தான் என்ன? எந்த மேடையில் பேசினாலும் பெரியாரைப் பற்றியும் சுயமரியாதைக் குறித்தும்தானே அருள்மொழி பேசுவார்; பேசட்டுமே என்று சமாதானம் செய்யாமல், மலேசியத் திராவிட இயக்கத்தின் பிரிவினைக்கு சென்னையில் இருந்து தூபம் போட்டார் வீரமணி. மொத்தத்தில் மதிக-வின் கொள்கைப் பிரச்சாரமும்(!) தன்மானத்தைவிட இனமானமேப் பெரியது என்று முழங்கிய பெரியாரின் எண்ணத்தை வெளிப்படுத்தும் பாங்கும்(!) ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமும்(!) நடைமுறையில் இப்படி இருக்கிறது.

அதனால்தான், பாலர் பள்ளி மாணவர்களைக் கொண்டு வண்ணம் தீட்டும் போட்டி நடத்துவது; ஆரம்பக் கல்வி மதிப்பீட்டுத் தேர்வு என்னும் யூ.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது; இருமொழிக் கொள்கைக்கு எதிராக பத்திரிகை அறிக்கை விடுவது என்ற அளவோடு தன்னை வரையறுத்துக் கொண்டு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘மானியம் பெறுவதற்காக முளைத்த இயக்கங்’களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டு பரிதாபமாக இன்று காட்சி அளிக்கிறது மதிக.

மதிக பல ஆக்கரமான திட்டங்களை செயலாக்கம் செய்து அதன் வழி அது இழந்த மதிப்பை மீட்கலாம்.

MDK 2பல்கலைக்கழக மாணவர்களையும் மாணாக்கியரையும் திரட்டி, ஒரு திருக்குறள் கருத்தரங்கை நடத்தி, ஐயன் வள்ளுவர் வகுத்த “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் கருத்தை எடுத்து சொல்லி எதிர்கால மலேசிய தமிழ்ச் சமூகம் சாதி பேதமற்று ஒருமித்த உணர்வுடன் திகழ நீங்களெல்லாம் பாடாற்ற வேண்டும் என்று கேட்கலாம்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரித் திங்களில் இதே மதிக, தன் தேசியப் பேராளர் மாநாட்டை ஈப்போ சாலை ‘கிராண்ட் பசிஃபிக் தங்கும் விடுதியில் நடத்திய அதே நேரத்தில் கூப்பிடு தூரத்தில் வன்னியர் சாதி மாநாடு நடைபெற்றது. அதுவும் பிரதமரின் சிறப்பு வருகையுடன் அம்னோ கட்டடத்தில்; இதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத மதிக, ஏதோ தூசியைத் தட்டிவிட்டு செல்வதைப் போல தன்போக்கில் சென்றுவிட்டது. தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தும் சுயமரியாதை இயக்க தேசியப் பேராளர் மாநாடு நடக்கும் அதே வட்டாரத்தில் அதே நேரத்தில் பிரதமர் தலைமையில் நாடளாவிய சாதிக் கூட்டம் நடைபெற்றது, இந்த இயக்கத்திற்கு பேரிழுக்காகும்.

இதைப்பற்றி முன்னமே அறியத் தவறி விட்டாலும் குறைந்தபட்சம் அன்றையக் கூட்டத்தில் இதைப்பற்றி ஒரு தீர்மானமாவது இயற்றி இருக்கலாம்; அதன் பிறகாவது சம்பந்தப்பட்ட அமைப்பிற்கோ அல்லது பிரதமர் அலுவலகத்திற்கோ ஒரு கடிதமாவது அனுப்பி, அதன்வழி இந்த மண்ணில் தன்னுடைய இருப்பையாவது மதிக காட்டிக் கொண்டிருக்கலாம்.

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டு பதிமூன்று  ஆண்டுகள் ஆகிவிட்டன; அதன் பொருட்டு தமிழ் மொழியின் மேம்பாட்டைப் பற்றி என்றைக்காவது மதிக எண்ணிப் பார்த்தது உண்டா? தமிழ் மொழிதான் உலகின் தொன்மையான மொழி; இனிமையான மொழி; தனித்து இயங்கும் மொழி; உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வட்டியின்றி கடனளித்த மொழி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளைத் தோற்றுவித்த மொழி; அப்படிப்பட்டத் தமிழ்  மொழிக்கு மலேசிய அரசின் இருபது பல்கலைக்கழகங்களிலும் தமிழிருக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கவும் மத்தியக் கூட்டரசிடமும் மாநில அரசுகளிடமும் கோரிக்கை வைக்கவும் மதிக முன்வர வேண்டும்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள இந்திய ஆய்வியல் துறையை, தமிழாய்வியல் துறை என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும் என்ற எண்ணமும் மதிக-விற்கு ஏற்படவேண்டும்.

periyarமலேசியத் தமிழ் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட வன்முறை குறித்து பேசும்பொழுதெல்லாம், நம் இளைஞர்களுக்கு ஆன்மிக சிந்தனை போதவில்லை என்று ஆன்மிக எல்லையில் இருப்போர் கருத்து தெரிவிக்கும்போதெல்லாம், மதிக தன் பங்கிற்கு இளைஞர்கள் சீரான வழியில் வாழ வேண்டுமென்றால் திருக்குறள் சிந்தனை மேம்பட வேண்டும். “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம், உயிரினும் ஓம்பப் படும்” (அதிகாரம் ஒழுக்கமுடைமை; குறள் எண் 131) என்று நம் செந்நாப் புலவர் வள்ளுவர் ஒழுக்கம் உயிரைவிட மேலானது என்று சொல்லி இருப்பதால், நம் இளைஞர்கள் திருக்குறளை நன்கு கற்று அதன்படி ஒழுக வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், ஆங்காங்கே திருக்குறள் கருத்தரங்கையும் நடத்தலாம்.

மலேசிய இந்து சங்கம் திருமுறை விழாவை நடத்துவதைப் போல, திருக்குறள் விழாவை நடத்த மதிக என்றாவது எண்ணம் கொண்டதுண்டா? மதிக-விற்கு தெரிந்தெல்லாம் தந்தை பெரியாரின் திருவுருவும் கருப்புச் சட்டையும் திராவிடம் என்னும் சொல்லும்தான்.

உயர்க்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பக்திப் பயிரை வளர்ப்பதற்குப் பதிலாக மூட நம்பிக்கையை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் மதிக-விடம் உதிக்கவில்லை.

ஆன்மிகக் கொள்கையைக் கடைப்பிடிப்பது அவரவர் உரிமை. ஆனால் மூட நம்பிக்கைக்கு அதுவும் நாளைய உலகின் தலைவரகளாகத் திகழப்போகும் இன்றைய உயர்க்கல்வி மாணவர்கள் கைக்கொள்ளும் மூடவழக்கம் நாளுக்கு நாள் பெருகுவதைப் பற்றிகூட நாட்டின் சுயமரியாதைப் பேரியக்கமான மதிக ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை.

இந்த நிலை நீடித்தால் இன்னும் நூறாண்டு கழித்து 171-ஆவது பொதுக் குழுவைக் கூட்டினாலும் மதிக-வால் இந்த மண்வாழ் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. இனியாவது, மதிக புது செப்பம் பெறுமாவென பொறுத்திருந்து பார்ப்போம்.