கத்தார் மீது செளதி கோபம்: தொடங்கிய வேகத்தில் முடிந்த இருதரப்பு பேச்சுவார்த்தை

qatar

சௌதி அரேபியாவின் முடி இளவரசர் கத்தார் மன்னருடன் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, கத்தார் உடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தம் செய்வதாக அந்நாடு அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 5-ஆம் தேதி, தீவிரவாதத்திற்கு உதவுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்பேரில், கத்தார் மீது சௌதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு

எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை விதித்த தடைகளைத் தொடர்ந்து, அந்நாடுகளுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை சரி செய்யும் நோக்குடன் இரு தரப்புப் பேச்சு வார்த்தை நடந்துவந்தது.

வெள்ளியன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு தரப்பினரிடமும் தனித்தனியாக நடத்திய தொலைபேசி உரையாடல் இந்த விவகாரத்தில் தீர்வை நோக்கிய முக்கிய நகர்வாகக் கருதப்பட்டது.

கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி மற்றும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேவை குறித்து விவாதித்ததாக இரு நாட்டு அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

யார் என்ன சொன்னார்கள்?

சௌதி ஊடக நிறுவனம் , கத்தார் தலைவர், நான்கு நாடுகளின் நிபந்தனை குறித்து உட்கார்ந்து பேசி விவாதிக்க விருப்பம் உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளார் என கூறுகிறது.

 

அதே நேரத்தில், கத்தார் செய்தி நிறுவனம், சௌதி முடி இளவரசர், “இரண்டு தூதர்கள் மூலம், இரு நாடுகளின் இறையாண்மை கெடாதவாறு, சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை தீர்க்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக கூறியுள்ளது.

பின்னர் சற்றுநேரத்தில், கத்தார் பேச்சுவாத்தையில் தீவிரமாக இல்லை என்றும், இருதரப்புக்கும் இடையிலான தொடர்புகள் இடைநிறுத்தம் செய்யப்படும் என்று சௌதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

கத்தார் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை அந்நாட்டு அரசு ஊடகம் தெளிவுபடுத்தவில்லை என்று, சௌதி அரேபியா கோபமாக உள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அல்- ஜசீரா செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தை மூடுவது, இரானுடனான உறவுகளை குறைத்து கொள்வது ஆகிய அம்சங்களுடன், தடைகளை விலக்குவதற்கான நிபந்தனை பட்டியலை, கத்தாரிடம் , சௌதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள் வழங்கிவிட்டன.

தீவிரவாதத்தை வளர்க்கும் ஊடகம் என இந்நாடுகள் கூறும் குற்றசாட்டை அல்-ஜசீரா மறுக்கிறது.

சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர, மேற்கத்திய சக்திகளின் துணையோடு, குவைத் எடுத்த ராஜதந்திர முயற்சிகள் தோல்வி அடைந்தன.

வெள்ளியன்று,. டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியாக , செளதி, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுடன் பேசினார்.

இதுகுறித்த வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அமெரிக்காவின் அரபு கூட்டாளி நாடுகளின் ஒற்றுமை என்பது பிராந்திய ஸ்திரத்தன்மையை ஊக்கப்படுத்தவும், ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், இன்றியமையாதது என அதிபர் கோடிட்டுக் காட்டியுள்ளார் ” என கூறியுள்ளது.

மேலும், ” தீவிரவாத குழுக்களுக்கு அளிக்கப்படும் நிதியை தடுக்கவும், தீவிரவாத சித்தாந்தத்தை எதிர்த்து போரிடவும், அனைத்து நாடுகளும் தாங்கள் அளித்த உறுதிமொழியைப் பின்பற்ற வேண்டும்” என்றும் கூறியுள்ளது. -BBC_Tamil