குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா உள்பட 14 போலி சாமியர்கள் பெயரை மடாதிபதிகள் குழு வெளியிட்டது

fake-godmenஅலகாபாத், இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அக்காரா பரிஷத் நேற்று 14 போலி சாமியார்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.

போலி சாமியார்களிடம் ஏமாற வேண்டாம் என்று மக்களை எச்சரிப்பதற்காக அலகாபாத்தில் உள்ள இந்த அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.

இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோன்று குஜராத்தை சேர்ந்த பிரபல சாமியார் அசராம் பாபு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதே மாவும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிஉள்ளார். சாமியார்கள் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு வெளியாகி வரும் நிலையில் போலி சாமியார்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அக்காரா பரிஷத் குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா உள்பட 14 போலி சாமியர்கள் பெயரை வெளியிட்டு உள்ளது. அலகாபாத்தில் உள்ள தலைமையகத்தில் பல்வேறு மடங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்ற பின்னர் இந்த பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது. “பாரம்பரியத்திற்கு உட்படாத மற்றும் கேள்விக்குரிய செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற சாமியார்களிடம் கவனமாக இருக்கவேண்டும், இவர்களால் பிற சாதுக்கள் மற்றும் முனிவர்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறது,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அசராம் பாபு, ராதே மா, சச்சிதானந்த கிரி, குர்மீத் சிங், பாபா ஓம், நிர்மல்ஜித் சிங், இச்சாதாரி பீமானந்த், சுவாமி அசீமானந்த், ஓம் நமக சிவாய் பாபா, நாராயண் சாய், ராம்பால், ஆச்சார்யா குஷ்முனி, பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகியோர் போலி சாமியார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கையானது மத்திய, மாநில அரசுக்களிடம் வழங்கப்படும் போலி சாமியார்கள் மீது சட்டப்படி  கடும் நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் மேலும் 28 போலி சாமியார்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-dailythanthi.com

போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது-திக் விஜய் சிங்

tig vijayபுதுடெல்லி, இந்தியாவில் உள்ள துறவிகளின் தலைமை பீடமாக கருதப்படும் அகில இந்திய அகாரா பரிஷத் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்தது. கூட்ட முடிவில் இந்தியாவில் உள்ள முக்கிய போலி சாமியார்கள் 14 பேரின் பட்டியல் வெளியிடப் பட்டது.

இந்த நிலையில் இது குறித்து டுவிட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது:

போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. போலி பொருட்களை விற்பதன் மூலம் நாட்டு மக்களை அவர் ஏமாற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

–dailythanthi.com

TAGS: