நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்க வேண்டும்: கல்வியாளர்கள் கூறும் காரணங்கள்

navothayaதமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு எட்டு வாரங்களில் ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள சமயத்தில், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பாகுபாட்டை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுமார் ரூ.600 கோடி செலவிடுவதற்கு பதிலாக, அந்த நிதியை அரசுப் பள்ளிகளுக்கு அளித்தால், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

1986ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கிராமப்புற மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தரமான கல்வியைத் தரும் நோக்கத்தில் ‘நவோதயா பள்ளிகள்’ என்ற உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், இந்தப் பள்ளிகள் தமிழகத்தில் திறக்க இருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் என்ன என கல்வியாளர்கள் அடங்கிய பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை என்ற அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

காரணம் ஒன்று: ஒவ்வொரு ஆண்டும் நவோதயா பள்ளிகளில்,நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் 11-ஆம்வகுப்புகளில் அதிகபட்சமாக 80 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. இதைமீறும் நடவடிக்கையாக நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. இதன் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

காரணம் இரண்டு: நவோதயா பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் 80 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது விதி.

 

ஒரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்ளபோது அவர்களுள் 80 மாணவர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு தரமானக் கல்வியைத் தருகிறோம் என்பது மாணவர்களுக்கு மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.

விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கடந்த பிறகும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் அதிநவீன வசதிகளைக் கொண்ட உயர்தர கல்வி, மற்றவர்கள் வசதிகளற்ற பள்ளிகளில் பயிலட்டும் என்பது குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்காதா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

காரணம் மூன்று: ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்விக்கூடம் என்ற அளவில் நவீன வசதிகளுடன் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

இந்தியா முழுவதும் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கு அருகில் முழுமையான கட்டமைப்பு வசதிகள் கொண்ட அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்படவேண்டும் என்று 1966ல் கோத்தாரி குழு பரிந்துரை செய்தது.

ஆனால் மாவட்ட தலைமையிடத்தில் நவோதயா பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டால், கற்பதற்காக குழந்தைகள் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெகுதூரம் உள்ள உண்டுஉறைவிடப் பள்ளியில் படிக்கவேண்டியுள்ளது.

தமிழகத்தில் 1950 முதல் 1960 வரை காமராஜர் ஆட்சிக்காலத்தில், மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி என தமிழ்நாடு அரசே பள்ளிகளைத் திறந்துள்ளது. இந்த பள்ளிகளின் தரத்தை உயர்த்தி அனைத்துக் குழந்தைகளும் அருகாமையில்,சிறப்பான கல்வியைப் பெற உதவவேண்டும்.

காரணம் நான்கு: நவோதயா பள்ளிகளை தொடங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் முப்பது ஏக்கர் நிலத்தை மாநில அரசு அளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் ரூ.70,000 முதல் 80,000வரை என்ற அளவில், தமிழகத்திற்கு சுமார் ரூ.600 கோடி நிதி அளித்து, 32 மாவட்டங்களில் மத்திய அரசு நவோதயா பள்ளிகளை திறக்கவுள்ளது.

ஒரு பள்ளிக்கு பல கோடி செலவு என்பதற்குப் பதிலாக சமச்சீராக அனைத்துப் பள்ளிகளுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து தர அரசு முன்வந்தால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பயன்பெறுவர்.

சமத்துவமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்தித் தருவதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 கூறுகிறது.

ஆனால், நவோதயா பள்ளி ஒரு இடத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களுக்குக் கல்வி அளிப்பது சரியா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அனைவருக்கும் தரமான கல்வி என்பதற்கு பதிலாக குறிப்பிட்ட மாணவர்களுக்கு தரமான கல்வி அளித்தால், அது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்ற கருத்து எழுந்துள்ளது.

காரணம் ஐந்து: நவோதயா பள்ளியில் அளிக்கப்படும் கல்வி தமிழகத்தில் வழங்கப்படும் சமச்சீர் கல்வியைக் காட்டிலும் தரமானது என்ற கற்பிதம் நிலவுகிறது.

தமிழகத்தில் ஆரம்ப பள்ளியில் இருந்து உயர்கல்விவரை தாய்மொழி வழியில் அரசுப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமச்சீர் கல்வி எந்தவிதத்திலும் தரம் குறைவானது அல்ல.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில், பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அவர்களை பதில் எழுதி மதிப்பெண் பெறும் மாணவர்களாக இல்லாமல், அவர்களின் தனித்திறனை அறியவும் பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. -BBC_Tamil

TAGS: