பீர் விழா வேண்டும் என்று நேற்று கூறிய மசீச தலைவர் லியோ இன்று வேண்டாம் என்கிறார்

 

mcabeernoசிறந்த பீர் விழா 2017 ஐ அக்டோபர் 6-7 திகதிகளில் நடத்துவதற்கு கேஎல் மாநகர் மன்றம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

இந்த விழா கோலாலம்பூரில் 2011 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வந்துள்ளது. எந்தப் பிரச்சனையும் எழுந்ததில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாஸ் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ரிதுவான் முகமட் நூர் இந்நிகழ்ச்சியைக் குறைகூறினார். இது தீவிரவாதிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

இப்போது, இந்நிகழ்ச்சியை இவ்வருடம் நடத்துவதற்கு அரசியல் உணர்ச்சிகள் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மைபீர் (ம) செண்ட். பெர்ஹாட் கூறினர்.

சிறந்த பீர் விழா 2017 ஐ நடத்துவதற்கு அனுமதி இல்லை என்ற டிபிகேஎல்லின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நேற்று மசீச தலைவர் லியோ மசீசவின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்திற்கு பின்னர் கூறியதாக சின் சியு டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாக எந்தப் பிரச்சனையுமின்றி நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் டிபிகேஎல் இப்போது அதை நிறுத்தக்கூடாது என்று லியோ கூறினார் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது.

“நாம் தனிப்பட்ட கருத்துகளை அரசாங்கக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது, அது கோலாலம்பூர் அனைத்துலக கேலிக்கூத்தாவதற்கு இட்டுச் செல்லும்.

“நாம் பெடரல் அரசமைப்புச் சட்டத்தையும் பல்வேறு இனங்களின் சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். இந்நாட்டின் சட்டங்கள் மீறப்படாதவரையில், டிபிகேஎல் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்”, என்று மசீச தலைவர் லியோ கூறினார்.

இந்த விவகாரம் குறித்து நேற்று இவ்வாறு கூறிய மசீச தலைவர் லியோவின் நிலைப்பாடு இன்று முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதை சீன நாளிதழ்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்த விவகாரத்தை தாம் இன்று அமைச்சரவையில் எழுப்பியதாகவும் தமக்குக் கொடுக்கப்பட்ட தகவலின்படி போலீசார் அளித்த ஆலோசனைக்கு ஏற்ப பாதுகாப்பு காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாக லியோ கூறினார் என்று பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.

“(அமைச்சரவை) கூட்டத்தின் போது கொடுக்கப்பட்ட தகவல் குறித்து நான் திருப்தி அடைகிறேன். பொறுப்புள்ள கட்சி மற்றும் அரசாங்கம் என்ற முறையில், மக்களின் பாதுகாப்பு எப்போதுமே நமது முதன்மையான முன்னுரிமையாக இருந்துள்ளது”, என்று லியோ அமச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது போன்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு, நாம் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போலீசார் மற்றும் அதிகாரிகள் எடுத்துள்ள முடிவையும், அளித்துள்ள ஆலோசமையும் நாம் மதிக்க வேண்டும் என்று லியோ மேலும் கூறினார்.

சீன நாளிதழ்களின் செய்திப்படி, டிபிகேஎல் எடுத்துள்ள முடிவுக்கும் அரசியல் மற்றும் சமயம்  ஆகியவற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று லியோ கூறினார்.

“அது அரசியல் அல்லது சமய உணர்ச்சிகள் என்றால், நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

“ஆனால், அது பாதுகாப்பு பற்றிய கேள்வி என்றால், இது பற்றி நான் என்னைக் குழப்பிக் கொள்ளக்கூடாது” என்று லியோ தெரிவித்ததாக குவொங் வா டெய்லி கூறுகிறது.