இணையத்தில் தீவிரவாத கருத்துகளுக்கு எதிரான முயற்சிகளை கூகுள் ஆதரிக்கும்

googleஇணையத்தில் தீவிரவாதக் கருத்துகள் பரப்பப்படுவற்கு எதிராக தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுத்துவரும் முயற்சிகளை கூகுள் ஆதரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிபிசியிடம் பேசிய கூகுளின் மூத்த துணைத் தலைவர் கென்ட் வால்க்கர், டிவிட்டர் மட்டும் இதற்காக ஒரு மில்லியன் கணக்குகளை நீக்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.

தமது கொள்கைகள் மற்றும் அமலாக்கத்தை மேம்படுத்துவதற்காக ஃபேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இணையத்தில் உள்ள தீவிரவாத கருத்துக்களை நீக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டாயம் விரைவாகவும் முன்னோக்கியும் செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூற உள்ளார்.

தீவிரவாத கருத்துக்களை இரண்டு மணிநேரத்திற்குள் நிக்குவதற்கான வழிகளை சமூகவலைதளங்களும், தேடுதல் இயந்திரங்களும் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட உள்ளார்.

பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன், ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளை தெரீசா மே சந்திக்க உள்ளார். -BBC_Tamil