சிறிலங்காவில் நிலையான அமைதிக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – ஐ.நா தூதுவர்

una-mccauleyசிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான அனைத்துலக நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் 21ஆம் நாளை, அமைதிக்கான அனைத்துலக நாளாக கொண்டாடுகிறோம். எல்லா நாடுகள், மற்றும் மக்களிடையே அமைதியை வலுப்படுத்துவதற்காக இந்த நாளை ஐ.நா பொதுச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

இன்று, அனைத்துலக சமூகம் என்ற வகையில், எமது கடமைகளை நினைவில் கொள்ள வேண்டும். வன்முறை மோதல்களும், பாகுபாடுகளும், மிகவும் பாதிப்புகளைத் தரக் கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு, “அமைதிக்காக இணைந்திருந்தல் – அனைருக்கும் மதிப்பளித்தல், பாதுகாப்பு மற்றும் கௌரவம்” என்ற தொனிப் பொருளில் அமைந்துள்ளது.

குறிப்பாக அகதிகளையும், குடியேற்றவாசிகளையும் கவனத்தில் கொள்கிறோம். அனைவரதும் மனித உரிமைகளை பாதுகாத்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும்.

மோதல்களுக்கான காரணிகளுக்குத் தீர்வு கண்டு, வன்முறைகளைத் தடுத்து, ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டியது எமது கடப்பாடாகும்.

சிறிலங்காவில் போர் முடிந்து விட்டது. இன்னமும் வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமைகள் இன்னமும் உள்ளது.

நிலையான அமைதிக்காக அனைவரும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளது.

அமைதியைக் கட்டியெழுப்புதல், மற்றும் நல்லிணக்கத்துக்கு இன்னமும் அதிகமாகச் செய்ய வேண்டியுள்ளது.

இதன் அர்த்தம், நாம் மற்றவரின் மதத்தை, இனத்தை, கலாசாரத்தை, பெறுமானத்தை, அரசியல் நம்பிக்கையை மதிக்க வேண்டும். அர்த்தமுள்ள முன்னேற்றங்களுக்காக, வேறுபாடுகளை மறந்து இணைந்து செயற்பட வேண்டும்.

பாகுபாடு, சகிப்பற்ற தன்மை மற்றும் சமத்துவமின்மை ஊக்குவிக்கப்படுதல் அல்லது அலட்சியம் செய்யப்படும் வரை, எங்களது முயற்சிகள் பயனற்றவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: