`முதல் குண்டு விழும்வரை` ராஜதந்திரம் தொடரும் : டில்லர்சன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுடனான மோதலை, ராஜதந்திர முறைப்படியே தீர்க்க விரும்புவதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

`வடகொரியா முதல் குண்டு போடும் வரை` இது தொடரும் என அவர் சி.என்.என்னிடம் தெரிவித்துள்ளார்.

தடைகளும், ராஜதந்திரமும், வடகொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒற்றுமையை உருவாக்கியுள்ளது என்றார்.

கடந்த மாதம், டில்லர்சன், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரத்தை வீணாக்க வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஞாயிறன்று நடந்த நேர்காணலிலும், டில்லர்சன், அதிபர் டிரம்ப்பை கயவன் என்று அழைத்தாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

`இது போன்ற சின்ன விஷயங்கள் குறித்து நான் பேசமாட்டேன்` என பதிலளித்த அவர், அத்தகைய கேள்விகளுக்கு மரியாதை அளிக்க மாட்டேன் என்றார்.

சமீப மாதங்களில், சர்வதேச நாடுகளின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வட கொரியா தனது ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதோடு, இரண்டு ஏவுகணைகளை ஜப்பானுக்கு மேல் அனுப்பியது.

ஐ.நாவின் தடையுள்ள போதிலும், வடகொரியா, அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில், தனது அணுஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பேச்சுவார்த்தைக்கான வழி

கடந்த மாத இறுதியில், வடகொரியாவுடன் `நேரடி பேச்சுவார்த்தையில்` உள்ளோம் என்றும், பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை பார்ப்பதாக டில்லர்சன் தெரிவித்திருந்தார்.

பல மாத சொற்போருக்கு பிறகு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிக்கு வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது.

எனினும், அடுத்தநாளே, டிரம்ப், `உங்களின் உடல் திறனை வீணடிக்காதீர்கள் ரெக்ஸ். நாம் செய்ய வேண்டியதை செய்வோம்` என டுவிட்டரில் பதிவிட்டார்.

ஜூலை மாதம் பெண்டகனில் நடந்த கூட்டத்திற்கு பின்பு, டில்லர்சன், அதிபரை கயவன் என அழைத்ததாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதற்கு பதிலளிக்கும் வகையில், அதிபர், இருவரின் அறிவுத்திறனுக்கான போட்டி வைத்துகொள்வோம் என்று கூறினாலும், அது விளையாட்டாக சொல்லப்பட்டது என செய்தி தொடர்பாளர் பின்பு தெரிவித்தார். -BBC_Tamil