பேரரசர் சிவப்புச் சட்டை பேரணியை நிறுத்த வேண்டும், என்ஜிஒ-கள் கோரிக்கை

AppealtoAgongசிவப்புச் சட்டையினர் செப்டெம்பர் 16 இல் நடத்த திட்டமிட்டிருக்கும் பெர்சே எதிர்ப்பு பேரணியை நிறுத்த வேண்டும் என்று 20 அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணி பேரரசரிடம் ஒரு மனுவை இன்று தாக்கல் செய்தது.

இதுவரையில் கிடைத்துள்ள தகவல்படி இந்த எதிர்ப்பு பேரணி இரத்தக்களரியில் முடிவடையலாம் என்ற கருத்து நிலவுகிறது என்று புரோராக்யாட் தலைவர் கைருல் அனுவார் ஓத்மான் இஸ்தானா நெகாராவுக்கு வெளியில் கூறினார்.

யார் வேண்டுமானாலும் அமைதியாகக் கூடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது, ஏனென்றால் அந்த உரிமை அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எதிர்ப்பு பேரணி ஓர் அமைதியான ஒன்றுகூடுதலாகத் தெரியவில்லை என்றாரவர்.

இந்த சிவப்புச் சட்டை எதிர்ப்பு பேரணியை நிறுத்த வேண்டும் என்று பேரரசரிடம் மனு தாக்கல் செய்தற்கான காரணம் போலீசார் எந்த அளவிற்கு இந்த பேரணியை வெற்றிகரமாகக் கையாள்வார்கள் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது என்று அப்துல் ரசாக் இஸ்மாயில் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிவப்புச் சட்டை பேரணி பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்படும் என்று போலீஸ் படையின் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார்.

சில நாள்களுக்குப் பின்னர், துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அம்னோ உறுப்பினர்கள் இப்பேரணியில் கலந்து கொள்வதை தாம் தடுக்கப் போவதில்லை என்று கூறினார். அந்நிலைப்பாட்டை பிரதமர் நஜிப் கடந்த புதன்கிழமை ஆதரித்துள்ளார் என்று ரசாக் சுட்டிக் காட்டினார்.

இதனால், போலீசார் இப்பேரணியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்பதில் நம்பிக்கை வைக்க முடியவில்லை என்றாரவர்.

இப்பேரணி வன்செயலில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் பேரணியில் நிலவரத்தை கண்காணிப்பதற்காகவும் ஒடாய் ரிபோர்மாஸி மற்றும் புரோராக்யாட் மொத்தம் 2,500 தன்னார்வலர்களை அனுப்பும் என்று அவர் மேலும் கூறினார்.