எம்பி: அஸலினா சொல்வது தவறு, ரபிஸி கைது நாடாளுமன்ற விதிகளை மீறிய செயல்

wrongசெவ்வாய்க்கிழமை  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி  கைது  செய்யப்பட்டது  நாடாளுமன்ற  விதிகளை  மீறும்  ஒரு  செயல்  என்று  எதிரணி  எம்பி  ஒருவர்  கூறினார்.

அந்த  வகையில்  சட்டப்படியாகவே  அவர்  கைது  செய்யப்பட்டிருக்கிறார்  என்று  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒஸ்மான்   கூறியிருப்பது  தவறு  என்கிறார் பாடாங்  செராய் எம்பி  என். சுரேந்திரன்.

“அவர்  சொல்வது  முற்றிலும்  தவறு. ரபிஸி  கைது  செய்யப்பட்டது   சட்ட  விரோதமானது.  அது  1952 நாடாளுமன்ற( சலுகை, அதிகாரம்)ச்  சட்டத்தை  மீறிய  செயலாகும்.

“அச்சட்டத்தின்  பிரிவு 9(இ)  ஒரு  எம்பி-யை  நாடாளுமன்றத்துக்கு  வரும்போதோ மன்றத்திலிருந்து  போகும்போதோ  தடுப்பது  நாடாளுமன்றத்தை  அவமதிப்பதாகும்  என்கிறது.

“ரபிஸி  நாடாளுமன்றத்திலிருந்து  ‘போகும்போது’  கைது  செய்யப்பட்டதை   உறுதிப்படுத்த  படங்களும்  சாட்சிகளும்  உண்டு.. எனவே,  பிரிவு  9(இ)  மீறப்பட்டிருப்பதை  மறுக்கவியலாது”, என  சுரேந்திரன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.